Ad

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நாளை ரக்ஷா பந்தன் ( ஆகஸ்ட் 3-ம் தேதி ). ஒரு சகோதரனாக என் பசுமையான நினைவுகளை இங்கே பதிவுசெய்துள்ளேன்.

``உன்னை முதலில் பார்த்த நாள்

நினைவில் இல்லை,

என்று சொல்லிவிட்டேன்.

அவ்வுளவுதான்

தொடங்கிவிட்டது போர்..

சண்டைக்கு காரணமா தேவை ?

கையும்,வாயும் தானே.

அடிக்கும் அளவுக்கு

பலம் இருக்கிறது,

இருவருக்கும்,

மனம் தான் அய்யோ வலிக்குமா? என்கிறது,

இருந்தாலும் சண்டையென்றால்

அடிக்காமல் எப்படி முடிப்பது?

Representational Image

இந்த அடிதடிச் சண்டையில்

அவள் அழாமல் இருந்தால்தான்

வெற்றி எனக்கு ..

இளவரசி அழுதுவிட்டாலோ

அவ்வளவுதான்,

விசாரித்து அடிக்க

ஜனநாயக வீடுகளா

இருக்கிறது இங்கே.

ராஜாவும் , ராணியும்

விசாரணையன்றி யல்லவா

என்னை அடிப்பார்கள் ..

ஆம்,வீட்டில்

அவள் இளவரசி ,

நான் இளவரசன் ,

பள்ளிக்கூடத்தில்

அவள் தங்கை,

நான் அண்ணன் ,

ஊருக்குள் சிலர்,

என்னை "டேய் தம்பி" என்றும்

அவளை இன்னும் " இங்க வா பாப்பா"

அன்பாய் அழைத்து

பேதம் காட்டுகிறார்கள் ..

Also Read: ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..?

அவள் பல நேரங்களில்

அப்பாவின் உளவாளியாகிவிடுகிறாள் ,

சில நேரங்களில்

அம்மாவின் சிநேகிதியாகிவிடுகிறாள்

அந்நேரங்களில்

எங்கே என்னை

குற்றவாளியாக்கி விடுவாளோ என

என்மனம் நான் செய்த

தவறுகளை ஒவ்வொன்றாய்

நினைத்து பதறும் வேளையில் ,

அவள் எதையும் கூறாமல்

காத்துவிடுகிறாள் ..

Representational Image

அவளுக்கு எது பிடிக்காது என்றே

சிந்தித்து சீண்டிய மனம்,

அவளுக்கு எது பிடிக்கும் என

அறிய முயலும்

வேளையில் ,

நான் அண்ணன் ஆகிவிட்டேன் ,

அவள் ஒரு முட்டாளின் மனைவியாகிவிட்டால்.

பின் எப்படி சொல்வது ,

நடிப்பு முதல் , படிப்பு வரை

அவளிடம் தோற்ற என்னை ,

ஹீரோ என்கிறாள்

அவனும் நம்புகிறான்,

நீங்களே சொல்லுங்கள் அவன் முட்டாள்தானே ..

நான் ஒரு மறதிக்காரன் , அவள் அப்படியல்ல ,

அவள் முகம் சரியாக நினைவில் இல்லை,

முதல் வரியில் கூறி சண்டையிட்டதை

மறக்காமல் ,

நினைவூட்ட

தன்னை அழகாய் ஒரு பிரதியெடுத்து

கொடுத்திருக்கிறாள் குழந்தை வடிவில்.

அப்போதும் இந்த மறதிக்காரனுக்கு ,

எங்கேயோ பார்த்த மாதிரி தான் இருக்கிறது,

சரியாக நினைவில் இல்லை..

Representational Image

வெறுத்து போனவள் குழந்தையின்,

பிஞ்சு விரலால்

என் ஒற்றை விரலை

பிடித்த நொடியில்

நினைவுக்கு வந்துவிட்டது

முப்பது வருடங்களுக்கு பிறகு

சண்டைக்காரியின் அந்த முகம் .

குழந்தையவள் வளரும் நாள்களில் ,

நான் வளராமல்,பின் சென்று

குழந்தையாகவே

மாறிவிட்டேன் .

Also Read: சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் #HappyRakshaBandhan

அவள் வளர்ந்து ,

இதோ மாமனை அடிக்க வந்துவிட்டாள்

இளம் சண்டைக்காரி ,

அடிக்கட்டும் என

காத்திருக்கையில் ,

பெரியவர்களை அடிக்கக் கூடாதென்று

காத்துஓடிவருகிறாள் என் தங்கை..

அடிவாங்கியே தோற்ற நான்

முதல்முறையாக

அடிவாங்காமலே தோற்றுவிடுகிறேன்.

Representational Image

இந்நிகழ்வால் இந்த மறதிக்காரனின் ,

நினைவுக்கு வருகிறது

இதிகாசத்திலிருந்து ஒரு சம்பவம் ..

அண்ணன் கண்ணனின்

கையில் வழிகிறது ரத்தம்,

பதறிய தங்கை திரௌபதி

தன் சேலையை கிழித்து

வழியும் ரத்தத்தை தடுத்து

காக்கிறாள் ,

சிரவண மாதம் முழுநிலவன்று

நினைவில் நீங்கா இச்சம்பவத்தை

ரக்ஷா பந்தன் என்று

இன்றும் கொண்டாடுவர் வடவர்.

நாமும் வாழ்த்துவோம்,

ஊரடங்கால்

சந்திக்க முடியா சகோதரிகளை மட்டுமல்ல,

உயிரடங்காமல் காக்கும்

செவிலிய சகோதரிகளுக்கும் ..

நன்றியுடன், வாழ்த்துக்கள்..

--

-நா.உமாசங்கர்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/reader-shares-raksha-bandhan-special-poetry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக