காரைக்கால் அருகே கட்டப்பட்ட கோயிலுக்கான இடத்தை, நில உரிமையாளரான இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவர், மத நல்லிணக்கத்தைப் பேணும்வகையில் புதுவை அமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலையில் கோயில் நிர்வாகத்திடம் தானமாக வழங்கியுள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.
காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடி காஞ்சிபுரம் கோயில்பத்து பகுதி சாலையோரத்தில் உள்ள ஒரு வயல்வெளிப் பகுதியில், அங்கு வசிக்கும் மக்கள் சூலம் வைத்து நீண்டகாலமாக முனீஸ்வரன் சுவாமியை வழிபாடு செய்து வந்துள்ளனர். பின்னர், இந்த இடத்தில் ஆனந்த விநாயகர், மரமுனீஸ்வரன், சமுத்திர துர்கை ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனியே சந்நதிகள் அமைத்து, வணங்கி வந்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த பசுபதி என்பவர்தான் இக்கோயிலை நிர்வகித்து வருகிறார்.
Also Read: இந்து பக்தர்களுக்குக் குடிநீர் வழங்கிய ஜமாத்.. கோவை கோனியம்மன் தேர்த்திருவிழாவில் மதநல்லிணக்கம்
இந்நிலையில் காரைக்காலைச் சேர்ந்த தொழிலதிபர் சின்னத்தம்பி (எ) அப்துல் காதர் என்பவர் இந்தக் கோயில் அமைந்துள்ள இடம் உள்ள பகுதியுடன் கூடிய நிலத்தை குடியிருப்பு மனைகளாக்கி விற்பனை செய்வதற்காக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளார். அந்த இடத்தைக் கோயிலுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும் வகையில் அப்துல் காதரிடம் கிராம மக்கள் கேட்டுள்ளனர். இதையடுத்து, அப்துல் காதர் தனக்குச் சொந்தமான இடத்தைக் கோயிலுக்குத் தானமாக வழங்கும் வகையில், கோயிலை நிர்வகித்து வரும் பசுபதி என்பவரிடம் நிலத்தை ஒப்படைக்க முன்வந்தார்.
கோயில் அமைந்துள்ள இடம் இருந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலையில் அப்துல் காதர், அந்த இடத்துக்கான பத்திரத்தை பசுபதியிடம் வழங்கினார். இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து அப்துல்காதர் கூறுகையில்,``இந்த நிலத்தை நான் வாங்கியபோது, சிறிய அளவில் வழிபாட்டுத் தலம் இருந்தது. தற்போது கோயில் அமைந்துள்ள 1,200 சதுரடி மனையைக் கோயிலுக்கு அளிக்கும் வகையில் பசுபதி என்பவருக்கு இலவசமாக அளித்துவிட்டேன்.
மேலும், கோயிலுக்குப் பின் பகுதியிலுள்ள சுமார் 3,000 சதுரடி நிலத்தைக் கோயிலுக்கு பூங்கா அமைப்பதற்கென காரைக்கால் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளேன். மக்கள் வழிபாட்டுக்காகவும், மதநல்லிணக்கத்தைப் பேணும் வகையிலும் முழு மனதுடன் இதனைச் செய்துள்ளேன்" என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/karailkal-muslim-man-donated-his-land-to-hindu-temple
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக