Ad

வெள்ளி, 3 ஜூன், 2022

உ.பி: மருத்துவமனை அலட்சியம்; பிறந்து மூன்றே நாளான குழந்தை எறும்பு கடித்து பலி? - விசாரணைக்கு உத்தரவு

உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா(Mahoba) மாவட்டத்தில் உள்ள முதாரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர ரைக்வார் (Surendra Raikwar). இவரின் மனைவி சீமாவை(Seema) பிரசவத்துக்காக அந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

குழந்தை

கடந்த மே 30-ம் தேதி இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவரால் அந்த குழந்தையை பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) அனுமதித்தனர்.

குழந்தை இருந்த வார்டு மிகவும் அழுக்காகவும், எறும்புகள் இருந்ததாகவும் குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனை ஊழியர்களிடமும், அங்கிருந்த மருத்துவர்களிடமும் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அதுகுறித்து யாரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

NICU Ward

இந்தநிலையில், குழந்தை திடீரென இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மருத்துவமனை அலட்சியத்தின் காரணமாகவே எறும்பு கடித்து பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதாகக் குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

பிரசவம் பார்ப்பதற்கு அந்த மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் 6,500 ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். மருத்துவமனைக்கு விரைந்து வந்த கோட்வாலி(Kotwali) பகுதி போலீஸார் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.

மேலும், தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். பிறந்து மூன்றே நாளான பச்சிளம் குழந்தை எறும்பு கடித்து உயிரிழந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/in-up-three-day-old-infant-dies-of-ant-bites

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக