Ad

சனி, 4 ஜூன், 2022

ரயிலில் கூடுதல் லக்கேஜூக்கு 6 மடங்கு அபராதம்... சாமன்யர்களின் தலையில் பாரமேற்றுகிறதா ரயில்வே?!

இந்தியாவில் இயங்கும் ரயில்கள் ஆண்டுக்கு 500 கோடி மக்களை இடம்பெயர்க்கின்றன. தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்திய என 16 ரயில்வேகளை கொண்ட இந்திய இரயில்வே மொத்தம் 8,702 ரயில்களை நாடு முழுவதும் இயக்குகிறது. இது இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் இணைக்கிறது. சுமார் 13 லட்சம் பேர் ரயில்வேயில் பணிபுரிகிறார்கள். இந்திய ரயில்வேயின் சிறிய கட்டண உயர்வு, மாற்றம்கூட எங்கோ கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் சாமான்யர்களைப் பாதிக்கும் வகையில் பின்னிப் பிணைந்திருக்கிறது.

ரயில்வே

இந்த நிலையில், பயணிகள் ரயிலில் அளவுக்கு அதிகமாக லக்கேஜூடன் பயணம் செய்தால், 6 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும் என்ற ரயில்வேயின் அறிவிப்பு தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆனால், இந்த அறிவிப்பு புதியது இல்லை. அதாவது, லக்கேஜ் விதிமுறைகளைக் கடந்த 2018-ம் ஆண்டு திருத்தி அமைத்து வெளியிட்ட அறிவிப்பு குறித்து, தற்போது ட்விட்டரில் ரயில்வே மறு விளம்பரம் செய்துள்ளது.

இருந்தபோதிலும், 6 மடங்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என்ற ரயில்வேயின் அறிவிப்பு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ரயில்வேயின் அறிவிப்புப் படி,

ஏசி முதல் வகுப்பு - 70 கிலோ

ஏசி 2-டயர் ஸ்லீப்பர் / முதல் வகுப்பு - 50 கிலோ

ஏசி 3 - டயர் ஸ்லீப்பர் / ஏசி சேர் கார் - 40 கிலோ

ஸ்லீப்பர் வகுப்பு - 40 கிலோ

இரண்டாம் வகுப்பு - 35 கிலோ என கட்டணம் இல்லாமல் லக்கேஜை கொண்டு வரலாம்.

அதேபோல, லக்கேஜுக்கான கட்டணம் செலுத்தி ஒவ்வொரு பயணியும் அதிகபட்சமாக

ஏசி முதல் வகுப்பு - 150 கிலோ

ஏசி 2-டயர் ஸ்லீப்பர் / முதல் வகுப்பு - 100 கிலோ

ஸ்லீப்பர் வகுப்பு - 80 கிலோ

இரண்டாம் வகுப்பு - 70 கிலோ வரை கொண்டு செல்லலாம்.

இது குறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம். ``ரயில் பயணத்தில் அளவுக்கு மீறி ஒருசிலர் எடுத்து வரும் லக்கேஜினால் சக பயணிகளுக்கு அவசெளகரியான நிலை ஏற்படுகிறது. மேலும், பயணிகளிடையே மோதல் போக்கும் ஏற்படுகிறது. குறிப்பாக, தெற்கு ரயில்வேவை காட்டிலும், பிற ரயில்வேகளில் சமீபகாலமாகப் புகார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால்தான், லக்கேஜ் அபராதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ரயில்வே அமைச்சகம் ட்விட்டர் பேஜில் மே 29-ம் தேதி விளம்பர நோட்டீஸை இந்தியில் பதிவிட்டிருந்தது.

இந்த அபராதம் அனைவருக்கும் பொருந்தும். லக்கேஜ்-க்கு உரிய தொகை செலுத்த அனைவரும் முன்வரவேண்டும். அதேநேரத்தில், அபராத தொகை அதிகமாக இருப்பதாகப் பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. அது குறித்து ரயில்வே அமைச்சகத்துக்குத் தெரியப்படுத்தி வருகிறோம். ஏசி வகுப்புகளுக்கு அதிக கட்டணம் இருப்பதால்தான், அதற்கு அதிக கிலோ லக்கேஜ் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது" என்றார்.

அபராதம் விதிக்க சாத்தியமில்லை!

இது குறித்து நம்மிடம் பேசிய ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியும், தக்ஷின் ரயில்வே ஊழியர் சங்கத்தின் (DREU) முன்னாள் உதவி தலைவருமான இளங்கோவன், "ரயிலில் பயணம் செய்யும் நபர்கள் அதிகப்படியான லக்கேஜ் கொண்டு செல்வது வாடிக்கையாக நடக்கிறது. இதனால், வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுக்கத்தான், அபராதம் என்று ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால், இதனைக் கண்காணித்து, அபராதத்தை வசூல் செய்ய ரயில்வேயிடம் போதிய பணியாளர்கள் இல்லை. எடுத்துக்காட்டாகச் சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு கிட்டதட்ட ஒரு லட்சம் பேர் பயணத்துக்காக வந்து செல்கிறார்கள். அவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, லக்கேஜை பரிசோதனை செய்ய, போதிய எடை மிஷின் கையிருப்பு இல்லை. கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடியாது. அதேபோல, அதிக லக்கேஜ் கொண்டுவரும் பயணிகள் 30 நிமிடங்களுக்கு முன்பாக நிலையம் வரவேண்டுமென்று ரயில்வே அறிவுறுத்துகிறது. பலத்த பாதுகாப்பு உள்ள விமானநிலையத்துக்கு இது சாத்தியம்.

ஆர்.இளங்கோவன்

ஆனால், ரயில் நிலையங்களில் இது சாத்தியமே இல்லை. பல பயணிகள் இறுதி நேரத்தில்தான் ரயில் நிலையமே வருவார்கள். அவர்களை எவ்வாறு பரிசோதனை செய்து, சரியான நேரத்துக்கு அனுப்ப முடியும். அதிகப்படியான லக்கேஜ்-க்கு உரிய தொகை பெறவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நடைமுறைப்படுத்துவதில் ஏகப்பட்ட சிக்கல் உள்ளன. அதனை முறையாகச் சரிசெய்ய ரயில்வே முன்வராமல், இதுபோன்ற பதற்றத்தை உருவாக்குவதை நிறுத்தவேண்டும்" என்றார்.

கூட்டத்தில் தவழ்ந்து வரும் ரயில்

``பயணத்துக்காக ரயிலைச் சாமான்ய மக்களே அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த மக்கள் பயன்படுத்தும் ஸ்லீப்பர் வகுப்புக்குக் கட்டணம் இல்லாமல் 40 கிலோவும், இரண்டாம் வகுப்புக்கு 35 கிலோ என ரயில்வே நிர்ணயம் செய்துள்ளது. அதேநேரத்தில், ஏசியில் வகுப்பில் செல்லும் பயணிகள் கட்டணம் இல்லாமல் 70 கிலோ வரை கொண்டு வரலாம் என்பதும், கட்டணம் செலுத்தி 150 கிலோ வரை கொண்டு வரலாம் என்பதும் வெளிப்படையான வர்க்க பேதம். எனவே, சாமான்யர்களின் தலையில் பாரத்தை ஏற்றாமல், லக்கேஜ் விதிமுறையில் உள்ள இந்த பேதத்தைக் களைய அரசு முன்வரவேண்டும். ரயிலிலும், ரயில் நிலையத்திலும் இன்னும் அடிப்படை வசதிகளே முறையாக கிடைப்பதில்லை. அதனை முதலில் சரிசெய்துவிட்டு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசு யோசிக்க வேண்டும் என்பதே பயணிகளின்எதிர்பார்ப்பாக இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-indian-railways-recent-hot-announcement-on-luggage-fares

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக