Ad

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

ஒரு வீடும், சில பெண்களும், மாப்பிள்ளைகளும்! 'ஆதலினால் காதல் செய்வீர்' முதல் எபிசோட் எப்படி இருந்தது?

'ஆதலினால் காதல் செய்வீர்' டிஜிட்டல் சீரிஸின் தலைப்பில் காதல் நிரம்பி வழிய, ப்ரொமோ வீடியோக்கள் இளமை துள்ளலுடன் இருந்தது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. 2K கிட்ஸின் பெருநகரத்து காதல் கதை என எதிர்பார்த்து காத்திருந்தால், பச்சை வயல்களும், அதன் நடுவில் ஓட்டு வீடுகள் நிறைந்த சிறிய கிராமமும், குளக்கரையில் யாருக்காகவோ காத்திருக்கும் சிறுமிகளுமாய் அழகாய் தொடங்கியது முதல் எபிசோட்.

பொறுப்பான அண்ணன், அன்பான அண்ணி, பிரியமான அவர்களது குழந்தை, ஊருக்குள் பெரிய மனிதரான அப்பா, பாட்டி, என சிறிய கூட்டுக் குடும்பத்தில் தொடங்குகிறது நாயகி காயத்ரியின் கதை.

முதல் காட்சியில் மூன்று சிறுமிகளுடன் காயத்ரி சாலையின் ஓரமாக நின்று ஒரு காரை மறிக்க திட்டமிடுகிறாள். கார் தொலைவில் வருவதைக் கண்டதும் சாலையின் குறுக்காக கற்களை போடுகிறார்கள். காரை நிறுத்திவிட்டு இறங்கும் இளைஞனை காயத்ரியுடன் பேச தனியாக அழைத்து செல்கிறாள் சிறுமி ஒருத்தி. அவன் காயத்ரியை பெண் பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளை.

ஆதலினால் காதல் செய்வீர்

வழக்கமான தமிழ் சினிமா காட்சி போல் இருந்தாலும் வயலுக்கு நடுவில் ஒற்றை மரத்தடியில் இருக்கும் கோயிலும், அவர்கள் தனியாக பேசும் காட்சியும் மனதை நாஸ்டால்ஜியா உணர்வுக்குள் அழைத்துச் செல்கிறது. வட்ட வட்ட சாம்பிராணி புகைக்கு நடுவில் சொந்த ஃப்ளாஷ்பேக் ’பெண் பார்க்கும்’ காட்சிக்கும், சீரிஸுக்கும் பத்து பொருத்தங்களை அவசரமாக மனம் கணக்கிட்டுக் கொண்டிருந்தது. உடனே, “பழகி புரிந்துகொள்ளாமல், வருமானத்தையும், ஜாதகத்தையும் பார்த்து அரேஞ்சிடு மேரேஜ் செய்து கொண்டதில் என்ன பெருமிதம் வேண்டி கிடக்கிறது” என்று வேகமாக தலையில் குட்டி கேலியாக கேட்டது மனதின் மூலையில் இருந்து ஓர் குரல்.

சுதாரித்து பார்த்தால் காயத்ரி தன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையிடம், “தனக்கு தற்போது திருமணத்தில் விருப்பம் இல்லை’’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். வீட்டில் அவள் விருப்பத்தை கேட்கவில்லை என்றும், தன்னுடைய கனவுகளுக்கு தற்போது திருமணம் தடையாக இருக்கும் என்றும் சொல்கிறாள். தனது வீட்டில் சொல்ல முடியவில்லை என்றதும் அவர்கள் பேச்சைக் கேட்டு மனதுக்குள் கனவுகளை புதைத்துக்கொண்டு அப்படியே இருந்துவிடாமல் பெண் கேட்டு வருபவரிடம் பேசிப் பார்க்க துணியும் காயத்ரியின் முடிவு பாராட்டுக்குரியது. அவள் சொன்னதை புரிந்து ஏற்றுக்கொண்டு திரும்பி செல்லும் மாப்பிள்ளை வீட்டாரை காயத்ரியின் தாய் மாமா வீட்டுக்கு அழைத்து வருகிறார்.

எல்லோருக்கும் பெண்ணை பிடித்து விட பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என்று மாப்பிள்ளை கேட்கிறான். ”எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உன் கனவுகளுக்கு எந்தக் காலத்திலும் தடையாக இருக்க மாட்டேன்” என்று உறுதி கொடுக்கிறான்.

காயத்ரி குழப்படைகிறாள். அவள் திருமணத்துக்கு சம்மதிப்பாளா, குடும்பத்தினரை எப்படி சமாளிப்பாள், தனது கனவுகளை எப்படி நிறைவேற்றுவாள் என்று ஆரம்பித்த முதல் நாளே ஆர்வத்தைக் கூட்டுகிறது ‘ஆதலினால் காதல் செய்வீர்’.

ஒரு டிகிரி படித்து முடித்ததும் பெண்களிடம்கூட கேட்காமல் அன்பாகச் சொல்லி அவர்களை சம்மதிக்க வைத்து திருமணம் செய்து வைத்துவிடும் வழக்கம் இன்றும் சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் தொடர்கிறது. 21 - 22 வயதில் பெண்களுக்கு குடும்பப் பொறுப்பு, சமூகம் எனப் பல காரணம் சொல்லி திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.

மேற்கொண்டு படிப்பதும், வேலைக்குச் செல்வதும் கணவனின் அனுமதியோடு செய்யலாம் என்றும் சொல்லி அவர்களை ’கன்வின்ஸ்’ செய்வது இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. அதில் வெகுசிலரின் கனவுகளே நிறைவேறி இருக்கிறது. பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தங்கள் சுயவருமானத்தில் வாழ, கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

ஆதலினால் காதல் செய்வீர்

பெண்ணுக்கு திருமணம், வாழ்க்கை துணை விஷயங்களில் இத்தகைய கட்டுப்பாடுகள், தடைகள் இருப்பதை பேசும்போது இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். காயத்ரியை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை அவளை கல்லூரி நாட்கள் முதலே ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், வீட்டில் சொல்லி அவர்களை பெண் பார்க்க அழைத்து வந்ததாகவும் சொல்வான். அதேபோல் காயத்ரி தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என்று சொன்னவுடன் தன் பெற்றோரை கலந்து பேசாமலேயே, ‘திரும்பிப் போகிறேன்’ என்று அவனது முடிவை காயத்ரியிடம் சொல்வான்.

ஒரு ஆணுக்கு வேண்டும், வேண்டாம் என்கிற முடிவுகளை தன்னிச்சையாக, மிக எளிதாக எடுக்க முடிகிறது. ஆனால் தனது படிப்புக்காக அல்லது வேலைக்காக திருமணத்தைத் தள்ளிப் போடும் முடிவைக்கூட ஒரு பெண்ணால் சுயமாக எடுக்க முடிவதில்லை.

காயத்ரியின் அண்ணி அவளிடம் பிரியமாக இருப்பதோடு திருமணத்தை நிறுத்த அவளுக்கு உதவியும் செய்கிறாள். பொதுவாக தமிழ் சீரியல்களில் அண்ணி, மாமியார் கதாபாத்திரங்கள் கெடுதல் செய்வதை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு வீட்டுக்குள் பெண்கள் ஒற்றுமையாக இருப்பதை காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் அது பாசிட்டிவ் உணர்வையும் கொடுக்கிறது.

ஆதலினால் காதல் செய்வீர்

பெண்ணின் அத்தையும் - மாமாவும் பேசும் வசனங்கள் அவ்வளவு இயல்பாக இருக்கிறது. ‘’கார் அனுப்புறேன்னு சொன்னாங்க… அது வேணாம்னு உங்ககூட வந்தா நத்தை மாதிரி வண்டிய ஓட்டி என் முதுகை ஒடைச்சி அப்புறம்தான் வீட்டுல கொண்டுபோய்விடுவீங்க போல'’ என அத்தை கதாபாத்திரம் சொல்ல, அதற்கு ‘’ஒத்தையடி பாதையில செருப்பில்லாம போன காலம் எல்லாம் மறந்துபோச்சோ’’ என மாமா சொல்ல, ‘’செருப்பு போட வக்கில்லாம இருந்தவங்கதான் 40 பவுன் நகையை அடகுக்கு கொடுத்திருக்காங்க'’ என சில நொடி வசனங்கள் மூலம் அந்த கதாபாத்திரங்களின் ஸ்கெட்சை அவ்வளவு இயல்பாக மனதுக்குள் பதிய வைத்திருப்பது சிறப்பு. இது மட்டுமல்லாமல் அந்த வீடும், அந்த வீட்டுக்குள் இருக்கும் மக்களும் எப்படிப்பட்டவர்கள் என்பதை வசனங்கள் மூலம் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்கள்.

மகளை கண்டதும் தனது நகையை அணிவிக்கும் காயத்ரியின் பாட்டி, தனது அக்கா இறந்த பிறகு அக்காவின் பிள்ளைகளை கவனித்துக்கொள்ள அக்காவின் புகுந்த வீட்டோடு தங்கிவிடும் காயத்ரியின் தாய்மாமன் என அனைவரின் அறிமுகம், ஃப்ளாஷ்பேக்கில் கலர்ஃபுல் கல்லூரி நினைவுகள், பாட்டு என விறுவிறுவென இருபது நிமிடங்களும் போனதே தெரியாத அளவுக்கு அவ்வளவு என்கேஜ்டாக இருந்தது முதல் எபிசோட்.

இன்று இரவு 8.30 மணிக்கு ‘ஆதலினால் காதல் செய்வீர்' இரண்டாவது எபிசோடுக்காக வெயிட்டிங்.


source https://cinema.vikatan.com/television/vikatans-digital-series-adhalinaal-kaadhal-seiveer-first-episode-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக