Ad

வெள்ளி, 23 ஜூலை, 2021

``வாய மூடிட்டு இருந்தா சரிவராது!” - வெடித்த சண்முகம்; வெளியான அறிவிப்பு

நீட் தேர்வில் இருந்து விலக்கு, குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி, பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, கேஸ் சிலிண்டருக்கு மானியம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது தி.மு.க. ஆனால், மாநிலத்தின் நிதி நிலைமை அதள பாதாளத்தில் இருப்பதால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறுகிறார்கள். ஜூலை முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டிருந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கூட நிதி நிலை சரியில்லாத காரணத்தால் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், தி.மு.க அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி போராட்டத்தில் குதித்திருக்கிறது அ.தி.மு.க. நேற்று அ.தி.மு.க தலைமை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘வரும் ஜூலை 28-ம் தேதி, அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் தங்கள் வீட்டின் முன் பதாகைகளுடன் நின்று கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்ப வேண்டும்’ என்று அறிவுத்தப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளிவருவதற்கே ஒரு போராட்டம் தேவைப்பட்டதாகச் சொல்கிறார்கள் அ.தி.மு.க-வின் சீனியர்கள்.

நம்மிடம் பேசிய கழக அமைப்புச் செயலாளர்கள் சிலர், “ஜூலை 22-ம் தேதி முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 26 இடங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையிட்டனர். அன்றைய தினம் உட்கட்சி தேர்தல் தொடர்பாக விவாதிக்க ராயப்பேட்டையிலுள்ள கட்சி தலைமையகத்தில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையால், இந்தக் கூட்டத்தில் உட்கட்சித் தேர்தலை ஓரங்கட்டிவிட்டு, தி.மு.க-வின் இந்த ரெய்டு ஆக்‌ஷன் குறித்துதான் பிரதானமாகப் பேசப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் என சீனியர்கள் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், சி.வி.சண்முகம் தான் தி.மு.க-வுக்கு எதிராக வெடித்துப் பேசினார்.

Also Read: அ.தி.மு.க அவைத்தலைவர் மாற்றம்? - எடப்பாடியின் மூவ்.. செக் வைக்கும் பன்னீர்!

‘இப்படியே நாம வாய மூடிட்டு இருந்தா சரிவராது. திருப்பி அடிச்சாத்தான் தி.மு.க-வுக்கு பயம் வரும். 2016-ல அம்மா மறைந்த பிறகு, 2006-11 தி.மு.க ஆட்சிக்காலத்துல நடைபெற்ற முறைகேடு புகார்களை தீவிரமாக விசாரிக்க நாம தவறிட்டோம். போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தபோது நடந்த முறைகேடு குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் தோண்ட ஆரம்பிச்சார். இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவுல வழக்கும் பதிவாகியிருக்கு. இந்த வழக்குல அப்பவே நாம சரியான நடவடிக்கையை எடுத்திருந்தா, இன்னைக்கு செந்தில்பாலாஜி சிறையில இருந்திருப்பார். நாம கோட்டை விட்டுட்டோம். தி.மு.க-வோட இந்த அதிகார அத்துமீறலைக் கண்டிச்சு நம்ம கட்சி மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தனும்’ என்றார் சி.வி.சண்முகம். ஆனால், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் சில அமைச்சர்களுக்கு சி.வி.சண்முகத்தின் கருத்தில் உடன்பாடில்லை. தி.மு.க-வை தேவையில்லாமல் கோபப்படுத்த வேண்டாமென அவர்கள் கருதினார்கள். கட்சித் தலைமையைக் குழப்பிவிட்டு, அன்றைய கூட்டத்தின் முடிவில் வெறும் கண்டன அறிக்கை மட்டும் வெளிவரும்படி அவர்கள் பார்த்துக் கொண்டனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டுக்குச் சென்ற சி.வி.சண்முகம் தலைமையிலான கட்சி நிர்வாகிகள்

ஆனால், சி.வி.சண்முகமும், கே.பி.அன்பழகனும் இந்த விவகாரத்தை அத்தோடு விடவில்லை. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு, எம்.ஆர்.சி நகரிலுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டுக்கே நேரடியாகச் சென்றனர். உள்ளே ரெய்டு நடைபெற்றதால், வீட்டுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. வாசலுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் வந்ததும், அவருக்கு நேரில் கட்சி ஆதரவு இருப்பதை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, ஜூலை 22-ம் தேதி மாலை கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசிய சி.வி.சண்முகம், ‘இந்த நேரத்துல வெறும் கண்டன அறிக்கையை மட்டும் வெளியிட்டுவிட்டு அமைதியாகிட்டா, கட்சித் தொண்டன் சோர்ந்து போய்டுவான். நீங்க போராட்டம் நடத்துற அறிவிப்பை வெளியிடலைனா, விழுப்புரம் மாவட்டச் செயலாளரான நானே தன்னிச்சையா என் மாவட்டத்துல கண்டன போராட்டம் நடத்துவேன். அதுக்கப்பறம் நீங்க கோவிச்சுக்கக் கூடாது’ என்று ‘கட் அண்ட் ரைட்’டாகச் சொல்லிவிட்டாராம். இதே தகவல் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சொல்லப்பட்டது. போராட்டத்திற்கு அவரும் இசைவு தெரிவித்தார்.

Also Read: `பா.ஜ.க உடனான கூட்டணியே, அ.தி.மு.க தோல்விக்குக் காரணம்!' - சி.வி.சண்முகம் அதிரடி

இடையில் புகுந்த சில முன்னாள் அமைச்சர்கள், ‘கொரோனா நேரத்துல தேவையில்லாம ஏன் கூட்டத்தைக் கூட்டிகிட்டு. பேசாம ஒவ்வொருத்தர் வீட்டு வாசல்ல இருந்தபடியே கண்டன முழக்கங்களை எழுப்புவோம்’ என்று கழக தலைமையை மீண்டும் குழப்பினர். 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதை அந்த முன்னாள் அமைச்சர்கள் காரணமாக முன்வைத்தனர். வேறு வழியில்லாமல், அவர்கள் கொடுத்தத் திட்டத்திற்கு கட்சித் தலைமை ஒப்புதல் வழங்கியுள்ளது. ‘பெகாசஸ்’ மென்பொருள் மூலமாக காங்கிரஸ் தலைவர்களின் டெலிபோன் உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்திருக்கும் புகாரில் நீதி விசாரணை வேண்டி, இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. தமிழகத்திலும் ஒவ்வொரு மாவட்ட கமிட்டி வாரியாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அதுபோல, அ.தி.மு.க-வும் செய்தால்தான் கட்சித் தொண்டர்களிடம் எழுச்சியிருக்கும். வீட்டிலிருந்தபடியே போராடுங்கள் என்று அ.தி.மு.க தலைமை அறிவித்திருப்பதால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை” என்று நொந்து கொண்டனர் சில அதிமுகவினர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நேரில் ஆதரவளித்த முன்னாள் அமைச்சர்கள்

தி.மு.க-வின் இந்த ரெய்டு ஆக்‌ஷனால், அ.தி.மு.க-வுக்குள்ளேயே இரண்டு பிரிவுகள் உருவாகியிருக்கின்றன. தி.மு.க-வை தீவிரமாக எதிர்க்க வேண்டுமென்ற ஒரு கோஷ்டியும், தி.மு.க-வை ஏன் தேவையில்லாமல் கோபப்படுத்த வேண்டுமென்ற ஒரு கோஷ்டியும் முளைத்திருக்கிறது. கட்சித் தலைமையே இரண்டு கோஷ்டிகளாக செயல்படும் நேரத்தில், தி.மு.க-வை வைத்து கோஷ்டிகள் உருவாகியிருப்பது அ.தி.மு.க-வை மேலும் கலகலக்க வைத்திருக்கிறது. வரும் புதன்கிழமை அ.தி.மு.க அறிவித்திருக்கும் போராட்டத்தில் என்னென்ன காட்சிகள் அரங்கேறப் போகிறது என்பதை வைத்துத்தான், இந்த இரண்டு கோஷ்டிகளுக்கு இடையேயான பிரச்னைகள் விவகாரமாகும் என்கிறது அ.தி.மு.க வட்டாரம். பொறுத்திருந்து பார்ப்போம்.



source https://www.vikatan.com/news/politics/former-minister-cveshanmugam-played-crucial-role-in-admk-protest-agenda

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக