Ad

ஞாயிறு, 18 ஜூலை, 2021

நீலகிரி: ஆத்திரத்தில் ஏற்பட்ட விபரீதம்; உயிரிழந்த சிறுவன்! - கைதான உறவினர்

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகிலுள்ள ஜல்லிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரின் மனைவி ஷாலினி. இந்தத் தம்பதியின் 6 வயது மகன் ஜீவன்ஸ்ரீ. இந்தத் தம்பதியரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர். மகன் ஜீவன்ஸ்ரீயை தாய் ஷாலினி பராமரித்துவந்திருக்கிறார்.

கொலை

இந்தநிலையில், நேற்று மாலை ஜீவன்ஸ்ரீக்கு, கட்டிலிலிருந்து கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக, ஊட்டியிலுள்ள அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர். சிறுவன் ஜீவன்ஸ்ரீயைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து உடலைக் கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

Also Read: க்ரைம் டேப்ஸ்: தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் கொலை; ஒரே கைரேகை! -துப்பு துலங்கியது எப்படி?| பகுதி 2

உடற்கூறாய்வு மேற்கொண்டதில், சிறுவனின் தலையில் ஏற்பட்ட காயம் வெட்டுக்காயம்போல இருப்பதாகச் சந்தேகம் எழுந்ததால், கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுவன் மரணம் தொடர்பாக ஊட்டி பி1 காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் சிறுவனின் உறவினரான விஜயகுமார் என்பவர் இரும்புக்கம்பியைக் கொண்டு சிறுவனைத் தாக்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

ஊட்டி நீதிமன்றம்

இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஊட்டி பி1 காவல் நிலைய போலீஸார், ``சிறுவனின் தலையில் ஏற்பட்டது வெட்டுக்காயத்தைப்போல் இருந்ததால், விபத்தா அல்லது கொலையா என்ற சந்தேகம் எழுந்தது. வழக்கு பதிவு செய்து சிறுவனின் பாட்டி, பெற்றோர் மற்றும் அந்தப் பகுதி மக்களிடம் விசாரணை நடத்தியதில், சிறுவனின் மாமா விஜயகுமாரை சிறுவன் ‌விளையாட்டாக கேலி செய்ததும், அதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் இரும்புக்கம்பியை எடுத்துத் தாக்கியதில் கடுமையான காயம் ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த வழக்கில் விஜயகுமாரைக் கைதுசெய்துள்ளோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/6-year-old-boy-death-near-ooty-relative-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக