Ad

செவ்வாய், 22 டிசம்பர், 2020

கரூர்: `உயிரோடு இருப்பவர்களை இறந்துவிட்டதாக கூறுகின்றனர்!' - செந்தில் பாலாஜி ஆவேசம்

"கரூரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாமில், உயிரோடு உள்ளவர்களை இறந்துவிட்டதாக அ.தி.மு.கவினர் பட்டியல் தயாரித்து, மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ளனர்" என்று செந்தில் பாலாஜி அதிரடியாக குற்றச்சாட்டினார். இதற்கு ஆதாரமாக, இறந்து விட்டதாக அ.தி.மு.கவினர் அளித்த மனுவையும், இறந்ததாக கூறப்பட்ட நபர்களையும் செய்தியாளர்கள் முன்பு நேரில் நிறுத்திய அவர், கரூர் அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்.

Also Read: `பூத்துக்கு ஒன்று; அ.தி.மு.க-வினரிடம் 4 வாக்காளர் அட்டைகள்!’- பகீர் கிளப்பும் கரூர் தி.மு.க

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 2021 - ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி, தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக, கடந்த மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கரூர் மாவட்டத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதோடு, புதிய வாக்காளர் சேர்ப்பது, உயிரிழந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது, இடமாறுதல் செய்வது உள்ளிட்ட பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் ஆளுங்கட்சியினர் தி.மு.க வுக்கு வாக்களிக்க கூடிய நபர்கள் என்று கூறக்கூடிய நபர்களை திட்டமிட்டு வாக்காளர் பட்டியல் இருந்து நீக்குவதாகவும், முறைகேடாக பல வாக்காளர்களை அ.தி.மு.கவினர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு அளித்து வருவதாகவும், செந்தில்பாலாஜி குற்றம்சாட்டினார். இதுகுறித்து, தேர்தல் ஆணையத்திடம் புகாரும் அளித்தார்.

செந்தில் பாலாஜி

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, "வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிடாத ஒரு படிவத்தை அ.தி.மு.கவே தயார் செய்து, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பூத்களிலும் பல வாக்குகளை நீக்கி வருகின்றனர். குறிப்பாக, உயிரோடு உள்ள பலரையும் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர் கையொப்பத்துடன் கூடிய படிவத்தில், இறந்தவர்களாக குறிப்பிட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ளனர்" என்று அதிரடியாக குற்றம்சாட்டிய செந்தில் பாலாஜி, இரண்டு பெண்களை பத்திரிகையாளர்கள் முன்பு நிறுத்தினார்.

"அவர்கள் இருவரும் கரூர் தொகுதியில் உள்ள சின்னகாளிபாளையம், பெரியகாளிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த சின்னப்பிள்ளை மற்றும் அனிதா" என செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தியதோடு, "இவர்கள் இருவரும் நிரந்தரமாக சின்னகாளிபாளையம், பெரியகாளிபாளையத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் இறந்து விட்டதாக, அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர் தனது கைப்பட கடிதம் எழுதி, அதை மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ளார். இதுபோலவே, மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பூத்திலும், பல வாக்காளர்கள் உயிரிழந்து விட்டதாக கூறி அ.தி.மு.கவினர் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்படாத, தேர்தல் ஆணையம் வெளியிடாத ஒரு படிவத்தை தாங்களாகவே தயாரித்து, அதில் உயிரோடு இருக்கும் பல வாக்காளர்களை இறந்துவிட்டதாக பூர்த்தி செய்து மாவட்ட நிர்வாகத்துடன் கொடுத்துள்ளனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழியும் உடந்தையாக உள்ளார். மாவட்டம் முழுவதும் சட்டத்திற்கு புறம்பாக வாக்காளர்களை நீக்கும் பணியில் அ.தி.மு.கவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இதற்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகம் துணை போகிறது. இது தொடர்பாக, இன்று வழக்கு ஒன்றை தி.மு.க சார்பில் தாக்கல் செய்ய உள்ளோம்" என தெரிவித்தார்.

அதோடு, அ.தி.மு.கவினர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய ஒரு படிவத்தையும் செய்தியாளர்கள் முன்பு காண்பித்தார் செந்தில் பாலாஜி.



source https://www.vikatan.com/government-and-politics/politics/senthil-balaji-interview-against-karur-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக