Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

சுவிட்சர்லாந்திடம் கற்கவேண்டிய பாடம்... மூணாறு நிலச்சரிவு நமக்கு சொல்வது என்ன? #Analysis

ஆய்வாளர் மாதவ் காட்கில், 2011-ம் ஆண்டு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலை சூழலியல் ஆய்வறிக்கையை உருவாக்கிய 12 பேர் கொண்ட ஆய்வுக் குழுவின் தலைவர். கேரளாவின் மூணாறு பகுதியில் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ந்து வரும், நிலச்சரிவு சேதங்கள் குறித்த அவருடைய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது.

மூணாறு அருகில் அமைந்துள்ள ராஜமாலாவின் பெட்டிமுடி என்ற பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, கடந்த ஆண்டு 2019-ம் ஆண்டு புத்துமலாவில் ஏற்பட்டதைப் போன்ற ஒன்றுதான். ஒரு பெரிய பாறை, தேயிலைத் தோட்டத்திலிருந்த தமிழக தலித் தொழிலாளர்களுடைய குடியிருப்புகள் மீது சரிந்துவிழுந்து பேரிழப்புகளை ஏற்படுத்தியது.

இது, இனி வரக்கூடிய பேரழிவுகளுடைய வரிசையில் ஒன்றுதான் என்று நான் அஞ்சுகின்றேன். 2011-ம் ஆண்டுத் தொடக்கத்தில், மேற்குத்தொடர்ச்சி மலை சூழலியல் ஆய்வுக் குழு, சூழலியல் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வகைப்படுத்தியது. கேரளாவில் மலைகளின் உயரத்தைப் பொறுத்து மழைப்பொழிவும் அதிகரித்த வண்ணம் உள்ளது. செங்குத்தான சரிவுகள் இருக்கும் பகுதிகளில் அதிகமான மழைப்பொழிவு நிகழும்போது, அது அப்பகுதியில் வாழும் மக்களை நிலச்சரிவு போன்றவற்றுக்கு உள்ளாக்குகின்றது.

பெட்டிமுடி (நிலச்சரிவுக்கு முன்)

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில், இயற்கையான தாவர வளங்களைப் பாதுகாக்க வேண்டுமென்பதே, முதன்மையான பரிந்துரையாக அந்த மேற்குத்தொடர்ச்சி மலை ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வகையில் தாவர வளம் பாதுகாக்கப்படுகின்ற, அவை கைவைக்கப்படாமல் இருக்கின்ற பகுதிகளில் அமைந்துள்ள இதுபோன்ற செங்குத்தான சரிவுகளில், அவற்றுடைய வேர்கள் மண்ணைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருப்பதால், நிலச்சரிவுச் சேதங்கள் மிகக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே, இயல் தாவர வளங்களின் மீது ஏற்படுத்துகின்ற பாதிப்புகள், அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடிய காலகட்டங்களில் பாதிப்புகளை அதிகப்படுத்தும். அத்தகைய இழப்புகளுக்கு, சாலை அமைத்தல், கட்டுமானங்கள், குவாரி, சுரங்கம், இயல் தாவரங்களை அழித்துத் தேயிலைத் தோட்டமிடுதல் போன்ற செயல்பாடுகள் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. ஆகவே, அதிமுக்கியத்துவம் வாய்ந்த சூழலியல் மண்டலம் 1-ல் இயல் தாவரங்கள் அழிக்கக்கூடிய, அதன் இயல்பான சூழலியல் சமநிலையைக் குலைக்கக்கூடிய எந்தவிதச் செயல்பாடுகளும் நடைபெறக்கூடாது. அதற்கு ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகின்ற இந்த நிலச்சரிவு இழப்புகளே உதாரணம்.

நாங்கள், இத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டுமென்று, மிகக் கடுமையாகவே வலியுறுத்தினோம். ஒருவேளை, ஆய்வுக் குழுவினுடைய பரிந்துரைகளுக்கு மதிப்பளித்துச் செயல்பட்டிருந்தால், கேரளாவில் 2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற நிலச்சரிவுப் பேரழிவுகள் நடக்காமல் தவிர்த்திருக்க முடியும் அல்லது குறைத்திருக்க முடியும்.

துரதிர்ஷ்டவசமாக, பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டுமென்ற எங்கள் பரிந்துரை புறக்கணிக்கப்பட்டது மட்டுமன்றி, கடந்த 9 ஆண்டுகளில் அவை அனைத்துமே அதிகரித்தன. கேரள மலைப் பகுதிகளில் தற்போது குவாரிகள் நிறைந்திருக்கின்றன. அதில் பலவும் பெட்டிமுடி பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெட்டிமுடியில் குவாரிகள் இல்லையென்றாலும்கூட, பாறைகளை உடைக்கும்போது ஏற்படுகின்ற அதிர்வுகள் அப்பகுதியின் நிலத்தைப் பலவீனமாக்கக்கூடிய அளவுக்குக் குவாரிகளுக்கு அருகே அவை அமைந்துள்ளன. ஆகவே, அங்கு ஏற்பட்டுள்ள இந்தச் சேதங்கள் நம்மை எவ்வித ஆச்சர்யத்திலும் ஆழ்த்தவில்லை.

பெட்டிமுடி நிலச்சரிவு சேதங்கள்

பூமி மேன்மேலும் சூடாகிக்கொண்டே போவதால், இந்த மாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றது. 20-ம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையைவிட, கடந்த 40 ஆண்டுகளில் பூமியின் தட்பவெப்பநிலை அதிகரித்துள்ளது. வரலாற்றில் அதிக வெப்பநிலை பதிவான ஆண்டுகளில் முதல் 12 இடங்களைப் பிடித்த வருடங்கள் அனைத்துமே 1998-க்குப் பிறகுதான். வெப்பம் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றில் இன்னும் தீவிர மாற்றங்களை இது கொண்டுவரும் என்று கணிக்கப்படுகின்றது. பூமியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, காற்றிலுள்ள நீராவியின் அளவும் மிக அடர்த்தியாகும். அது, மழைப்பொழிவில் பாதிப்புகளைக் கொண்டுவரும்.

காற்றைவிட மெதுவாகவே, நீர் சூடாகும். பூமியின் 70 சதவிகிதம் பெருங்கடல்களால் சூழ்ந்துள்ளது. அவை, பெரிய பெரிய மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய அளவுக்கு அதிகமாக ஏற்கெனவே சூடாகிவிட்டன. அரபிக் பெருங்கடலில் புயல் பாதிப்புகள் கடந்த ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. கடுமையான புயல் மற்றும் சூறாவளி ஆகியவற்றால், இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரம் சேதங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. மகாராஷ்டிராவினுடைய கொங்கன் கடற்கரையைத் தாக்கிய நிசார்க் புயலைப் போல. அரபிக் பெருங்கடல் தொடர்ந்து சூடாகிக் கொண்டேயிருக்கின்றது. ஆகவே, நிசார்க் நிச்சயம் கடைசி புயலாக இருக்கப்போவதில்லை. கோவா, கர்நாடகா, கேரளா கடற்கரைகளை, இன்னும் பல புயல்கள் தாக்கப்போகின்றன. அது பெரியளவிலான பொருளாதாரப் பேரிழப்புகளை உண்டாக்கும்.

உலகம் முழுக்கவே, விஞ்ஞானிகளின் கணிப்பைவிட வேகமாகக் கடல்மட்டம் உயர்ந்துகொண்டிருக்கின்றது. அதுவும், வெப்பமண்டலப் பகுதிகளில் அந்த வேகம் மற்ற பகுதிகளைவிட அதிகமாக இருக்கின்றது. அதேநேரம், எர்ணாகுளம் போன்ற கடலோர நகரங்கள், அதீதக் கட்டுமானங்கள், நிலத்தடி நீர்ச் சுரண்டல், தீவிர இயற்கை வளப் பயன்பாடு ஆகியவற்றால் அதிகரிக்கும் கடல் மட்டத்தில் மூழ்கிக்கொண்டிருக்கின்றன. ஆறுகள், கழிமுகப் பகுதிகள், கடலோர நீர்நிலைகள் என்று அனைத்துமே காடழிப்பு, சுரங்கம், குவாரி ஆகியவற்றினால் பாதிக்கப்படுகின்றன. இன்னும் விரிவாகச் சொல்லப்போனால், மேற்குக் கடற்கரை மொத்தமும் கடலோரச் சாலைகள், கட்டுமானங்கள் என்று அனைத்திலும் கடலோர பாதுகாப்பு மண்டலங்களின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரண்பட்டு செயல்படுவதால், இந்தப் பாதிப்புகள் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன.

இனிவரும் ஆண்டுகளில் புயல், சூறாவளி போன்றவை மேற்குக் கடற்கரையை அதிகமாகக் தாக்கக்கூடும். அது, இப்போது நாம் எதையெல்லாம் வளர்ச்சித் திட்டங்களென்று அழைக்கின்றோமோ அவற்றையெல்லாம் பெருஞ்சேதங்களுக்கு உள்ளாக்கும். ஏற்கெனவே பணக்காரர்களாக இருக்கக்கூடிய ஒரு சிலரின் பாக்கெட்டுகளை மேன்மேலும் நிரப்புவதைத்தான் அந்த வளர்ச்சித் திட்டங்கள் செய்துகொண்டிருக்கின்றன. நிலைமை இப்படியிருக்காமல், சமுதாயத்தின் அனைத்துத் தட்டிலும் வாழ்கின்ற மக்களைப் பயனடையச் செய்யும் விதமாகப்ப் பொருளாதார வளர்ச்சி இருந்திருந்தால், மிகக் குறைவான கூலியை வாங்கிக்கொண்டு, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஏன் வறுமையில் வாடப் போகின்றார்கள்? ஏன் அவர்களுடைய பாதுகாப்பற்ற சிறு சிறு குடியிருப்புகள் நிலச்சரிவுகளில் வீழ்கின்றன?

இதையெல்லாம் சரி செய்ய என்ன வழி?

அதற்கு, உண்மையான ஜனநாயக அடிப்படையிலான மையப்படுத்தப்படாத நிர்வாக முறை வேண்டும். உள்ளூர் மக்கள் சமூகங்களுக்கு, அது கிராமமாக இருக்கலாம், குறுநகரங்களாக இருக்கலாம், அவற்றுக்கு அப்பகுதியின் வளர்ச்சி குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை வழங்க வேண்டும். இதுவே மகாத்மா காந்தியுடைய தொலைநோக்குப் பார்வையாக இருந்தது. கிராமங்கள் சுயச்சார்புடையவையாக இருக்க வேண்டும் என்றார்.

சுவிட்சர்லாந்தின் மொத்த வனப்பரப்பு கடந்த 160 ஆண்டுகளில் வளர்ச்சியை மட்டுமே சந்தித்துள்ளது. அதற்கு முன்னர்கூட அதன் மொத்த நிலப்பரப்பில், 4 சதவிகிதம் மட்டுமே நிலச்சரிவு போன்ற சேதங்களைச் சந்தித்தது. அதன் விளைவாகவே, அவர்கள் காடுகள் பாதுகாப்பு மற்றும் மீட்டுருவாக்கத்தின் மீது கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். அனைத்துமே, உள்ளூர்ச் சமூகங்களாலேயே முன்னெடுக்கப்படுகின்றன. எந்தவித அரசு இயந்திரங்களும் அதிகாரங்களும் இதில் தலையிடுவதில்லை. சுவிட்சர்லாந்தின் மக்கள் சமூகம் ஒன்று திரண்டு செயல்பட்டதாலேயே அவர்களால், நேர்மையானதொரு ஜனநாயக அமைப்பின் வழியே, தம் நாட்டின் சூழலியலைப் பாதுகாக்க முடிந்தது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில்தான், நம் நாட்டின் பல பெருமுதலாளிகள் தங்கள் கறுப்புப் பணத்தை ஒளித்து வைத்துள்ளனர்.

மேற்குத்தொடர்ச்சி மலை

தங்கள் நாட்டு மக்கள், வறுமையில், சமுதாய ஏற்றத்தாழ்வுகளில் சிக்கிச் சிதையும்போது, அவர்கள் அனைவரும் தங்கள் கறுப்புப் பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளுடைய பெட்டகங்களில் பூட்டி வைத்துள்ளனர். அதைத் தவிர இந்த வளர்ச்சி வேறு எதையும் செய்வதில்லை. இந்தியாவுடைய பெரும் பலம், அதன் ஜனநாயகத்தில்தான் அடங்கியுள்ளது. அதற்குரிய ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டினால், ஒருநாள் இந்தியா முழுமையான ஜனநாயக நாடாக, சுவிட்சர்லாந்தைப் போல நிற்கும்.

அத்தகைய வழிமுறைதான், நாம் முன்னேறிச் செல்வதற்கான ஒரே வழி. பிரதமர் நரேந்திர மோடி, 2014-ம் ஆண்டு மே மாதம் தேர்தலில் வெற்றிபெற்ற போது எழுச்சியூட்டும் உரையை நிகழ்த்தினார். அந்த உரையில், ``நாம் அனைவரையுமே நம்முடைய வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வோம்" என்று கூறினார். அந்த வாக்குறுதியை, அவருடைய சத்தியத்தை நேர்மையாக நிறைவேற்றவேண்டிய கட்டாயத்தில் நாம் நிற்கின்றோம்.

மாதவ் காட்கில், மேற்குத்தொடர்ச்சி மலை சூழலியல் ஆய்வுக்குழு தலைவர்


source https://www.vikatan.com/government-and-politics/environment/madhav-gadgil-explains-lessons-we-should-learn-from-munnar-landslide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக