Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

புதுக்கோட்டை: `இறுதி நிமிட ரகசியம்; தவித்த வளர்ப்பு மகள்!’ - நெகிழ வைத்த காவலர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராஜாளிப்பட்டியைச் சேர்ந்த குஞ்சன்-பிச்சம்மாள் தம்பதிக்குத் திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதற்கு துர்காதேவி என்று பெயரிட்ட பெற்றோர்களுக்கு அப்போதைய சூழலில் அந்தப் பெண் குழந்தையை வளர்க்க முடியாத சூழ்நிலை இருந்ததாகக் கூறப்படுகிறது.

துர்கா தேவி

இந்த நிலையில், புதுக்கோட்டை கீழ 2-ம் வீதியைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதி சுப்பிரமணியன் அவர் மனைவி இருவரும் சேர்ந்து துர்காதேவியை முறைப்படி தத்தெடுத்து வளர்த்து வந்தனர். தத்தெடுத்ததோடு, இருவரும் துர்காதேவியை வளர்ப்புப் பிள்ளை என்று தெரியாத வகையில் பாராட்டி, சீராட்டி வளர்த்தனர்.

இதற்கிடையேதான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் சுப்பிரமணியன், அவர் மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்துவிடுகின்றனர். துர்காதேவிக்கு தற்போது 15 வயது. இதற்கிடையே, தான் தங்களுக்குப் பிறகு துர்காதேவி சிரமப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, இறக்கும் தறுவாயில் துர்காதேவியின் பிறப்பு ரகசியம் குறித்தும், பெற்ற தாய், தந்தை குறித்த விபரங்களைச் சொல்லிவிட்டு இறந்துவிட்டனர்.

என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த துர்காதேவிக்கு வளர்ப்புத் தந்தையால் ஒரு வழி கிடைத்தது. விராலிமலை காவல் நிலையத்தில், என்னை வளர்த்த பெற்றோர் என்னைவிட்டுச் சென்றுவிட்டனர். நிர்க்கதியாக நிற்கிறேன். என்னைப் பெற்றெடுத்த தாய், தந்தையரைக் கண்டுபிடித்துத் தாருங்கள்" என்று போலீஸாரிடம் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, உடனே போலீஸார் ராஜாளிப்பட்டி சென்று விசாரித்தனர். குஞ்சன்-பிச்சம்மாளைக் கண்டறிந்தனர். அவர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, இதுபற்றி விசாரணை நடத்தினர். நாங்கள்தான் அன்று பிள்ளையைத் தத்துக்கொடுத்தோம்.

15 வருஷம் கழித்து பெற்றவர்களிடம் சேர்ந்த துர்கா தேவி

தற்போது நாங்களே எங்கள் பிள்ளையைக் கூட்டிச் செல்கிறோம் என்றனர். துர்காதேவியும் பெற்றோருடன் செல்ல விருப்பப்பட்டதால், அவர்களுடன் அனுப்பி வைத்தனர். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, பெற்ற மகளைப் பார்த்த பெற்றோர் தூர்காதேவியை ஆரத்தழுவி கட்டியணைத்துக் கொண்டனர். பின்னர் தங்கள் வீட்டுக்குக் கூட்டிச் சென்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/adopted-child-find-their-parents-after-15-years-in-puthukottai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக