Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

சென்னை: 3 வயதுக் குழந்தையின் உயிரைப் பறித்த டிவி! - செல்போனால் ஏற்பட்ட விபரீதம்

சென்னை தாம்பரத்தை அடுத்த அகரம்தென், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் அந்தப்பகுதியில் மளிகைக் கடை நடத்திவருகிறார். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். 2-வது மகன் கவியரசு (3). பாலாஜி வீட்டில், டிவி வைக்கப்பட்டுள்ள இடத்தில் செல்போன் வைக்கப்படுவது வழக்கம். கவியரசுவின் கைக்கு எட்டும் தூரத்தில்தான் செல்போன் வைக்கப்பட்டிருக்கும். அதனால் அவன், செல்போனை எடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளான். சம்பவத்தன்று கவியரசு, டிவி அருகிலிருந்த செல்போனை எடுக்க முயன்றுள்ளான். செல்போன், சார்ஜரில் போடப்பட்டிருந்திருந்ததால் அதன் வயர் டிவியின் அடியில் சிக்கியிருந்துள்ளது. செல்போனை கவியரசு எடுத்தபோது அது வரவில்லை.

டிவி

அதனால் செல்போனை எடுக்கும் ஆசையில் கவியரசு, வேகமாகப் பிடித்து இழுத்துள்ளான். அப்போது எதிர்பாரத விதமாக டிவி, கவியரசு மீது விழுந்தது. அதனால் கவியரசு கதறி அழுதுள்ளான். சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் கவியரசை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டிவி, கவியரசுவின் தலையில் விழுந்ததால் அவன் மயக்கமடைந்தான். மருத்துவமனையில் கவியரசுவை பரிசோதித்த டாக்டர்கள், அவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அதைக்கேட்டு கவியரசுவின் பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து சேலையூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கவியரசுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கவியரசு மரணம் குறித்து அவனின் பெற்றோரிடம் விசாரித்தனர். அப்போது டிவி விழுந்ததால் அவன் இறந்துவிட்டதாக போலீஸாரிடம் கவியரசுவின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறினர்.

குழந்தை கவியரசு

Also Read: சென்னை: `சாமி போட்டோக்களில் ரத்தம்!' - போலீஸ் இன்ஃபார்மரான வி.சி.க பிரமுகர் கொலை

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``நேற்று மாலை டிவி அருகில் சார்ஜ் போட்டு வைத்திருந்த செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அந்தச் சத்தம் கேட்ட கவியரசு, ஓடிச் சென்று செல்போனை எடுக்க முயன்றுள்ளான். அப்போதுதான் டிவி, அவனின் மீது விழுந்துள்ளது. இதில், காயமடைந்த கவியரசன் பரிதாபமாக உயிரிழந்தான். பிரேதp பரிசோதனைக்குப்பிறகு கவியரசுவின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்" என்றனர்.

டிவி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சேலையூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/death/3-years-old-child-died-after-tv-falls-on-him-at-selaiyur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக