27 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 லட்சத்தைக் கடந்திருக்கிறது. மொத்த பாதிப்பு 27,02,743 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 876 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 51,797 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,77,780 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழக அரசு மேல்முறையீடு!
உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக சென்னை உயர்நீதிமன்றம் குறைத்ததற்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் உடுமலை சங்கர் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் விரைவில் உச்ச நீதிமன்றத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: இன்று முக்கிய தீர்ப்பு!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. 39 நாட்கள் விசாரிக்கப்பட்ட வழக்கின் வாதங்கள் அனைத்தும் முடிந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு இன்று தங்களது தீர்ப்பினை வழங்குகிறது,
இனி கல்வி அமைச்சகம்!
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பெயரை மாற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார். புதிய கல்விக்கொள்கை அறிவிக்கப்பட்ட போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக பெயரை கல்வி அமைச்சகம் என மாற்றும் முடிவை மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.
source https://www.vikatan.com/news/general-news/18-08-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக