Ad

புதன், 1 ஜூன், 2022

``நான் எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் பேசுறேன்" - ஆசிரியரிடம் ரூ. 3,24,900 மோசடி செய்த மர்ம நபர்

கரூர் மாவட்டம், குளித்தலை காவேரி நகர் என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கலைமணி (52). இவர், தாலியம்பட்டி பகுதியில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 11 - ஆம் தேதி எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் பேசுவதாக, இவரின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர், பான் கார்டு எண், வங்கி கணக்கில் இணைக்க விவரங்களை ஆசிரியர்களை கலைமணியிடம் கேட்டுள்ளார். அப்போது, தகவல்களை தர மறுத்து, தான் அவசரமாக பால் வாங்க வெளியே செல்ல இருப்பதாக கூறி, இணைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், கலைமணி அருகாமையில் உள்ள கடைக்கு பால் வாங்குவதற்காக சென்றுள்ளார். அந்த நேரத்தில் அவரின் மகள் அக்ஷயா கலைமணியின் செல்போனை பயன்படுத்தியபோது, குறுஞ்செய்தியில் வந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். அதன் மூலம், ஓ.டி.பி எண்ணை சமர்ப்பித்து வங்கி விவரங்களை அளித்ததாக சொல்லப்படுகிறது. பிறகு, ஐந்து நாள்கள் கழித்து ஏப்ரல் 15 ஆம் தேதி எல்.ஐ.சி பிரீமியத் தொகை செலுத்துவதற்காக எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்ற கலைமணி, வங்கி கணக்கில் உள்ள தனது இருப்புதொகையை பார்த்து உள்ளார்.

குளித்தலை

அப்போதுதான், இன்டர்நெட் பேங்கிங் மூலம் ரூ. 2,99,900 ஹெச்.டி.எஃப்.சி கணக்கு ஒன்றுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதேபோல், மீண்டும் அதே வங்கி கணக்கில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் இன்டர்நெட் பேங்கிங் மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியான கலைமணி, தனது வங்கிக் கணக்கில் இருந்து 3,24,900 எடுக்கப்பட்டு இருப்பதை அறிந்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அம்சவேணி, இணையதளம் மூலம் வங்கி கணக்கிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் பணத்தை எடுத்த அடையாளம் தெரியாத மர்ம நபர் குறித்து விசாரித்து வருகிறார். அதோடு, "சமீபகாலமாக இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். மேலும் இணைய வழி குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற இலவச என்னை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று போலீஸார் தெரிவித்தனர்



source https://www.vikatan.com/news/crime/in-kulithalai-a-teacher-was-cheated-in-the-name-of-bank-manager

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக