Ad

ஞாயிறு, 6 ஜூன், 2021

Magawa Rat: கம்போடியாவில் மோப்ப சக்தியால் உயிர்களைக் காத்த மகாவா எலி பணி ஓய்வு!

கம்போடியாவில் போர்களில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் மற்றும் கண்ணி வெடிகள் வெடிக்காமலிருந்து மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன. வெடிக்காத குண்டுகளைக் கண்டறிந்து மக்களைக் காத்து வந்தது இந்த சூப்பர் ஹீரோ எலி மகாவா. பெரிய உடலமைப்பும் அதீத மோப்ப சக்தியும் உடைய மகாவா எலிக்குக் கடந்த ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த பி.டி.எஸ்.ஏ விலங்குகள் நல அமைப்பு துணிச்சலான விலங்கு எனத் தங்கப் பதக்கம் அளித்துக் கௌரவித்தது.

போர்க்காலத்தில் கம்போடியாவில் 60 லட்சத்திற்கும் மேலான கண்ணிவெடிகள் வெடிக்காமல் கைப்பற்றப்படாமல் விடப்பட்டன. 1990களில் இருந்து 64000க்கும் மேற்பட்ட மக்கள் இதனால் மரணித்துள்ளனர். வெடிகுண்டுகளில் சிக்கி மக்கள் உயிரிழப்பதும் காயப்படுவதும் தொடர்ந்தன. 2018ம் ஆண்டு மட்டும் 6000-திற்கும் மேற்பட்ட மக்கள் வெடிகுண்டு விபத்திற்கு ஆளாகினர். இந்தச் சூழலில் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பாதுகாப்புப் படையினருக்கே சவாலாக இருந்த 39 கண்ணிவெடிகளையும் 20க்கும் மேற்பட்ட வெடிபொருள்களையும் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது குட்டி எலி.

மகாவா எலி

ஏழு வயதாகும் மகாவா எலிக்குப் பயிற்சி அளித்தது பெல்ஜியத்தை சேர்ந்த ஏபிஓபிஓ என்னும் நிறுவனம். ஐந்து ஆண்டு பணியில் 1.41 லட்சத்திற்கும் அதிகமான சதுர அடி பரப்பு நிலங்களைக் கிளறியுள்ளது மகாவா. இதன் சேவையைப் போற்றும் படி, அதன் ஓய்வுக்கு பிறகான நாள்கள் சுகமானதாக இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏபிஓபிஓ நிறுவனம் தெரிவித்துள்ளது. 1.2 கிலோ எடையும் 70 செ.மீ நீளமும் உடைய மகாவா ஒரு டென்னிஸ் மைதான அளவு நிலத்தை 20 நிமிடங்களில் முகர்ந்து ஆராயும் திறன் உடையது. தற்போதும் உடல் நலத்தில் குறை எதுவும் இல்லாத மகாவா, வயது முதிர்வு காரணமாகவே ஓய்வு பெறுகிறது.

வீடுகளில் எலிகள் மனிதர்களுக்குத் தொல்லை தருவது உண்மைதான். ஆனால், எந்த உயிரினமும் மனிதர்களைப் போல தானே தன் இனத்திற்கு வேட்டு வைப்பதில்லை. இரக்கமற்ற மனிதர்கள் போரில் வைத்த குண்டுகளிலிருந்து சக உயிரான மனிதர்களைக் காத்து வந்த மகாவா, உலக அளவில் பலரது பாராட்டையும் நன்றியையும் பெற்றுள்ளது.



source https://www.vikatan.com/living-things/animals/cambodias-hero-mine-sniffing-magawa-rat-retires-from-its-work

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக