Ad

வியாழன், 17 ஜூன், 2021

குமரி: `மரணத்துக்கு காரணம் கொரோனா; சான்றிதழ் கேட்கும் குடும்பத்தினர்!’ - தீர்வுகாண ஆட்சியர் உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது. அதில் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரின்ஸ் பயாஸ் பேசுகையில், "முதல் அலையில் நோய்வாய்பட்டவர்கள், முதியவர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். இரண்டாம் அலையில் நடுத்தர வயதுடையவர்கள் மரணமடைந்துள்ளனர். இரண்டாவது அலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் தாமதமாக மருத்துவமனைக்கு வந்ததால்தான் அதிகமான மரணங்கள் ஏற்பட்டன. காய்ச்சல் வந்தால் டெஸ்ட் செய்யச் சொல்லுவார்கள் என மெடிக்கல் ஸ்டோர், செவிலியர்கள் ஆகியோரிடம் மருந்து வாங்குகிறார்கள். அதற்குள் பத்து நாட்கள் ஆகிவிடும். அதன் பிறகு சீரியஸ் ஆகும்போது எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அந்த சமயத்தில் மருத்துவமனைக்கு வருவதால் அவர்களை காப்பாற்றுவது கஷ்டமாகிவிடும்.

கொரோனா முன்களப் பணியாளர்கள்

இரண்டாம் அலையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியவர்கள் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளை வெளியில் பொது நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லக்கூடாது. குழந்தைகளை இரண்டுமுறை குளிக்கச் செய்ய வேண்டும். சானிடைசர் பயன்பாடுபற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும். நாம் வெளியே சென்றுவிட்டு வந்தால் உடனே குழந்தைகள் அருகில் செல்லக்கூடாது. யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களை தனியாக உட்காரவைக்க வேண்டும்" என்றார்.

சுகாதாரத்துறை இணை இயக்குநர் பிரகலாதன் பேசுகையில், "கொரோனா முதல் அலையில் ஆரம்பக் கட்டத்தில் ஒருவர் எவ்வளவு பேருக்கு இந்த வைரஸை பரப்புவார்கள் என ஆய்வு செய்யப்பட்டது. சாதாரண காய்ச்சல் 1.6 பேருக்கு பரவும். ஆனால் கோவிட் 2.6 பேருக்கு பரவும். இந்த பரவல் எட்டு ஸ்டெப் போனபிறகு பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிவிடும். நூறுபேருக்கு கொரோனா வந்தால் அதில் 15 பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படும், 2 பேருக்கு வெண்டிலேட்டர் தேவைப்படும். அதில் ஒருவர் இறந்துபோகலாம். எனவே இறப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயல்படுகிறோம். தடுப்பூசி போட்டால் கொரோனா வந்தாலும் 99 சதவீதம் மரணம் தடுக்கப்படும்" என்றார்.

கலெக்டர் தலைமையில் நடந்த கொரோனா விழிப்புணர்வு கலந்துரையாடல்

மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி பேசுகையில், "கொரோனோ தொடர்பாக எந்த ஒரு புகார் வந்தாலும் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு உரிய பதில் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை, பெட் தேவை, வேறு வார்டுக்கு மாற்ற வேணடும் போன்ற எந்த ஒரு புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

மாவட்ட கலெக்டர் அரவிந்த் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நோய் தன்மை தற்பொழுது குறைய தொடங்கியுள்ளது. தற்போது கிராமப் பகுதிகளில் அதிக அளவில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் டோக்கன் வழங்குவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளன.

Also Read: குமரி: ஒரே நாளில் 7 அடி உயர்ந்த அணை; குளங்கள் உடைப்பால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

எனவே தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்வதற்காக புதிய செயலியை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகிறோம். இது விரைவில் நடைமுறைக்கு வரும். நோய்த்தொற்றால் இறந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம் குறிப்பிடமாட்டார்கள். கொரோனா தொற்று காரணமாக உயிர் இறப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் சில பிரச்னைகள் இருந்து வருகிறது. அரசின் உதவித்தொகை பெறுவதற்காக கொரோனாவால் இறந்தவர்களுக்கான மருத்துவச் சான்று தேவை என்பதால் பலர் கேட்கிறார்கள். மருத்துவ சான்றிதழ் தொடர்பாக இதுவரை 150 புகார் மனுக்கள் வந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட சிலர் கொரோனா தொற்று முடிந்த பிறகு, தொற்று காரணமாக ஏற்பட்ட வேறு நோய்களால் மரணிக்கின்றனர். எனவே அரசின் விதிமுறைப்படி இறப்பிற்கான காரணம் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/relatives-asking-to-mention-corona-as-cause-of-death-in-certificate-says-collector

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக