Ad

வியாழன், 22 ஜூலை, 2021

`கந்துவட்டி கேட்டு மிரட்டினால் குண்டர்சட்டம் பாயும்!' - எச்சரிக்கும் தூத்துக்குடி எஸ்.பி

கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தினால் பொதுமக்கள் பலர் வேலையில்லாமல் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொதுமக்களுக்கு கடன் கொடுத்த நபர்கள், கடனை திரும்பப் பெறுவதற்காக, கடன் பெற்றவர்களை அவதூறாகப் பேசுவதாலும், வீட்டுக்கே வந்து மிரட்டிச் செல்லுவதாலும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதனால், அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வதும், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் விபரீத நிகழ்வும் நடந்து வருகிறது.

தூத்துக்குடி எஸ்.பி., அலுவலகம்

கந்துவட்டிக்கு பணம் கொடுத்த தனிநபர்கள் மட்டுமின்றி பல தனியார் நிதிநிறுவனங்களும் கொடுத்த பணத்தை வசூல் செய்வதற்க்காக கடன் பெற்றவர்களை வீட்டிற்கேச் சென்று மிரட்டி வருகின்றனர். காலையில் விடிவதற்கு முன்பே வீட்டின் முன் அமர்ந்திருத்தல், கடன் தொகையை கொடுத்தால்தான் வீட்டைவிட்டுச் செல்லுவோம் எனச் சொல்லுதல் என பல விஷயங்கள் ஈடுபட்டு வந்தனர். கடந்த மாதம் கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் பெண்களிடம் கடன் தொகையை வசூல் செய்வதற்காக வீட்டிற்குள் அமர்ந்து மிரட்டிய தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த 3 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடந்த 16-ம் தேதி, தூத்துக்குடியில் மருத்துவ உபகரணங்கள் கடை நடத்தி வந்த ரங்கநாதன் என்பவர், கந்துவட்டிக்காரர்களின் மிரட்டலால், கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். `கடையை விரிவுபடுத்துவதற்காக சிலரிடம் வட்டிக்கு கடன் பெற்றேன். கடந்த சில மாதமாக பணம் கேட்டு என்னை மிரட்டினார்கள். வீட்டிற்கே நேரடியாக வந்தும் மனைவி, மகள்களை அவதூறாகப் பேசினார்கள். இதனால், அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என அவர் எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையிலும், அவரது மனைவியின் புகாரின் அடிப்படையிலும் முன்னாள் எஸ்.ஐ., உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜெயக்குமார் - தூத்துக்குடி எஸ்.பி

இதுபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் கந்துவட்டி வசூல் தொடர்பான புகார்கள் குவிந்தன. இந்நிலையில், ’தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை அவதூறாக பேசி மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள்’ என மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலின் தாக்கத்தினால் பொதுமக்கள் பலர் வேலையில்லாமல் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு கடன் கொடுத்த நபர்கள், கடன் பெற்ற பொதுமக்களை தற்கொலை செய்யத் தூண்டும் வகையில் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்துவருவதாகவும், இதே போன்று பல தனியார் நிறுவனங்களும் செயல்படுவதாக தகவல்கள் வருகிறது. இது குறித்து புகார்களும் வருகின்றன. ஏற்கனவே, `பொதுமக்களை கடன் கேட்டு நெருக்கடி கொடுத்து துன்புறுத்தக்கூடாது’ என மாவட்ட ஆட்சியரும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

தூத்துக்குடி எஸ்.பி., அலுவலகம்

பொதுமக்களின் உயிருக்கும், அவர்களது உடமைக்கும் பாதுகாப்பளிக்க வேண்டியது காவல்துறையின் தலையாய கடமை. இதுபோன்று கடன் பெற்ற பொதுமக்களிடம் சட்டவிரோதமாக கந்து வட்டி கேட்டு நெருக்கடி கொடுத்து, அவதூறான வார்த்தைகளில் பேசி மிரட்டல் விடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள்” எனக் கூறியுள்ளார்.

Also Read: ரூ.1 லட்சம் கடனுக்கு ரூ.6 லட்சம் வட்டி; பறிபோன நிலம்; கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை!



source https://www.vikatan.com/news/law-and-order/usury-interest-issue-warning-by-thoothukudi-sp-jayakumar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக