Ad

திங்கள், 21 ஜூன், 2021

கேரளா: கொரோனாவால் பெற்றோரை இழந்த 74 குழந்தைகள்! நிதி உதவிக்கான அரசாணை வெளியிட்ட அரசு!

கேரள மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இப்போது சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டத்தை கேரள அரசு கொண்டுவந்துள்ளது. அதில் கொரோனாவால் பெற்றோர் இருவரும் இறந்தால் அவர்களின் குழந்தைக்கும், ஏற்கனவே தாய் அல்லது தந்தையில் யாராவது ஒருவர் இறந்த நிலையில் மற்றொருவர் கொரோனா பாதித்து இறந்திருந்தால் அவர்களது குழந்தைகளுக்கும் இந்த திட்டம் மூலம் உதவ கேரள அரசு தீர்மானித்திருந்தது.

கொரோனா மரணம்

அதன்படி, கொரோனா பாதிப்பு காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் நிதி உதவிக்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை மற்றும் பெண் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "கேரள மாநிலத்தில் கொரோனா பாதித்து தாய், தந்தை ஆகிய இருவரையும் இழந்த குழந்தைகள். அல்லது ஏற்கனவே தாயே அல்லது தந்தையோ மரணமடைந்து, இப்போது மற்றொருவர் கொரோனா மூலம் மரணம் அடைந்திருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கும் அரசு உதவி வழங்குகிறது.

பெண் குழந்தைகள் வளர்ச்சித்துறை நிதியிலிருந்து ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோருக்கு 'ஜாயின்ட் அக்கவுன்ட்' தொடங்கப்படும். அந்த அக்கவுன்டில் மாதம் 2000 ரூபாய் வீதம் செலுத்தப்படும். இந்த தொகை குழந்தைகளுக்கு 18 வயது ஆகும் வரை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். அதுமட்டுமல்லாது அந்த குழந்தைகளின் பெயரில் மூன்று லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும். மேலும் அந்த குழந்தைகள் பட்டப்படிப்பு முடிக்கும் வரை படிப்புக்கான தொகை முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். இந்த நிதி உதவிக்கு தேவையான கூடுதல் தொகையை நிதித்துறை ஒதுக்கீடு செய்யும்.

அமைச்சர் வீணா ஜார்ஜ்

பெற்றோர் மற்றும் பாதுகாவலரை இழந்து ஆதரவில்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவ முதல்வர் கூறியதன்பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த குழந்தைகளின் பாதுகாப்பு, படிப்பு மற்றும் அவசர உதவிகள் செய்யவேண்டியது அவசியம். இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் அரசு இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்தது. கேரளத்தில் பெற்றோர் மற்றும் பாதுகாவலரை இழந்த 74 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களுக்கு இந்த அரசாணை மூலம் உதவிகள் சென்றடையும்" என்றார்.



source https://www.vikatan.com/news/india/kerala-govt-decided-that-3-lakh-fixed-deposit-for-children-who-lost-their-parents-due-to-covid

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக