Ad

செவ்வாய், 22 டிசம்பர், 2020

குமரி: `பதவி ஆசை தேவை, ஆனால் வெறி இருக்கக்கூடாது!’ - கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கேக் வெட்டினார். இதில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனார்.

இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "சிறுபான்மை மக்களின் விடிவெள்ளி அம்மாவை வணங்குகிறேன். கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 2010-ல் ஜெயலலிதா இந்த விழாவில் பங்கேற்றார்கள் என்பதை குறிப்பிட்டு சொல்கிறேன். உலகை ரட்சிக்க தேவதூதன் அவதரித்த நளை கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு மக்களும் விசுவாசத்துடன், ஏசுவின் போதனைகளை கடைபிடித்து வாழ வேண்டும். நம் எதிரில் துன்பத்துடன் இருக்கும் நபர்களுக்கு அருகில் சென்று இயன்ற உதவியை செய்ய வேண்டும். ஏசு அன்பிற்கு முக்கியத்துவம் அளித்தார்.

கிறிஸ்தவ நிறுவனங்கள் ஏழை மக்களுக்கு கல்வி, மருத்துவம் என சேவை செய்வதை நான் அறிவேன். ஜெயலலிதா 2010-ல் அருமனை வந்தபோது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். ஜெருசலேம் புனித பயணம் செல்ல 20,000 ரூபாய் வழங்கினார். இதுவரை 4,125 கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்றுள்ளனர். இந்த ஆண்டு ஜெருசலேம் செல்ல ஒருவருக்கு 37,000 ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டுள்ளேன். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கிறிஸ்தவ மகளிர் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதல்வருக்கு கேக் ஊட்டும் சிறுமி

தமிழகத்தில் 22 தேவாலங்கள் 55 லட்சம் ரூபாயில் புனரமைக்கப்பட்டன. தேவாலயங்கள் புதுப்பிக்கும் நிதியை ஒரு கோடியில் இருந்து 5 கோடியாக உயர்த்தி ஆணை இட்டுள்ளேன். சிறுபான்மை மக்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. வீரமா முனிவரின் தமிழ் பணி அற்புதம். தமிழுக்கு செழிவை ஊட்டினார். நவம்பர் 2-ம் தேதி அவரது பிறந்த நாளில் மாலையிட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. மீன்பிடி தொழில் குமரியின் முக்கிய தொழில். 2020 மீன்பிடி தடைகால நிவாரண நிதியாக மீனவர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 77 கோடி ரூபாயில் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுக விரிவாக்க பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டு பணி நடந்துவருகிறது. நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோமோ அதையே நாம் மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்.

ஒரு அரசு மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறோம். கல்வி கொடுக்க வேண்டும், கல்வியை கிரமம் முதல் நகர்ப்புறம் வரை செழிக்க வைத்தது இந்த அரசு. ஜெயலலிதா ஆட்சியில் நூறுக்கு 32 பேர் உயர்கல்வி படித்தார்கள். இப்போது தமிழகத்தில் 100-க்கு 49 பேர் உயர்கல்வி படிக்கிறார்கள். மக்களுக்கு சிறந்த மருத்துவம் தேவை. நான் கிராமத்தில் பிறந்தவன். ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டுமானால் என் ஊரிலிருந்து எடப்பாடிக்கு 14 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். பவானிக்கு 23 கிலோ மீட்டர் ஆற்றைக்கடந்துதான் செல்ல வேண்டும். அப்போது மருத்துவமனை இல்லை, டாக்டரும் இல்லை. அதை உணர்ந்து கடந்த 14-ம் தேதி தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்கை அறிவித்தேன்.

நலத்திட்ட உதவி வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

ஏழை குடும்ப மாணவ மாணவிகள் நீட் தேர்வால் மருத்துவ கனவு கானல் நீராகிவிட்டது. கிராம மக்களுக்காக உள் ஒதுக்கீடு செய்யும் திட்டம் என் மனதில் தோன்றியது. நான் அதிகாரிகளையும், வழக்கறிஞர்களையும் கலந்து பேசி 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்தேன். குமரி 13 மாணவர்ககும், தமிழகத்தில் 313 மாணவர்களும் உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்புக்கு சென்றுள்ளார்கள். எனக்கு எம்மதமும் சம்மதம். முதலமைச்சர் என்பது பணிதான். பதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களில் ஒருவனாக நான் பேசுகிறேன். பதவி ஆசை தேவை, ஆனால் பதவி வெறி இருக்கக்கூடாது. அது கண்ணை மறைத்துவிடும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/edappadi-palanisamy-speech-in-christmas-event

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக