Ad

வியாழன், 22 ஜூலை, 2021

கரூர்: பறிபோன ஆசிரியர் வேலை; அதிக மன உளைச்சல்! - பெற்ற தாயை கொலை செய்த பி.ஹெச்.டி படித்த மகன்

பி.ஹெச்.டி வரை படித்து, தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்த இளைஞர் ஒருவரின் மனநலம் பாதிக்கப்பட்டதால், அவரை வேலையை விட்டு நீக்கியிருக்கிறது, தனியார் பள்ளி நிர்வாகம். இதனால், அதிக மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞர், தன்னை பெற்ற தாயையே கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குளித்தலை

Also Read: `கோச்சுக்காதீங்க... பள்ளியில் இடமில்ல!' - மாணவர் சேர்க்கையில் அசத்தும் அரசு தொடக்கப் பள்ளி

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது திம்மம்பட்டி. இந்த ஊராட்சிக்குட்பட்ட கணக்கப்பிள்ளையூர் கிராமத்தில் உள்ள கக்கன் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர், பி.ஹெச்.டி வரை படித்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பொன்னுசாமி, கரூரில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்துவந்துள்ளார். சமீபத்தில் இவருக்கு மனநலம் சற்று பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தனியார் பள்ளி நிர்வாகம், பொன்னுசாமியை ஆசிரியர் பணியில் இருந்து நீக்கியதாக சொல்லப்படுகிறது. இதன்காரணமாக, பொன்னுசாமி இன்னும் அதிக மன உளைச்சலில் இருந்துள்ளார். இவரது தாய் முருகாயி வேலை விசயமாக கேட்க, அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்கிறார்கள். இதனால் கோபமான பொன்னுசாமி, தனது தாய் முருகாயியை திடீரென கழுத்தை அறுத்து, கொடூரமாக கொலை செய்தார். அதன்பிறகு, நிதானத்துக்கு வந்த அவர் தனது தாயை கொலை செய்த வருத்தத்தில், தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி

அதனை கண்ட அவரது உறவினர்கள், பொன்னுசாமி தற்கொலை செய்துகொள்ள முயன்றதை தடுத்து, அவரை காப்பாற்றினர். அதோடு, இந்த கொலை சம்பவம் குறித்து அந்த கிராம மக்கள் குளித்தலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குளித்தலை காவல் நிலைய போலீஸார், முருகாயி உடலை கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். அதோடு, இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த குளித்தலை காவல் நிலைய போலீஸார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயையே மகன் கொலை செய்துள்ள சம்பவம், குளித்தலை பகுதி மக்களை அதிர வைத்திருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/karur-teacher-murdered-in-his-mother-police-investigation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக