Ad

செவ்வாய், 20 ஜூலை, 2021

இந்திய மாநிலங்களின் வரலாறு: மொழியால் அடுத்தடுத்து புதிய மாநிலங்களின் தோற்றம்! பகுதி - 4

இந்தியாவில் மாநில மறுச்சீரமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பின்னும் வெவ்வேறு காலகட்டங்களில் புதிய மாநிலங்களின் தோற்றம் தொடர்ந்துகொண்டுதான் இருந்தன. ஒன்றுபட்ட பம்பாய் மாகாணத்தை மராத்தி பேசும் மக்களுக்கென தனி மாநிலமாகவும், குஜராத்தி பேசும் மக்களுக்கென தனி மாநிலமாகவும் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இதன் காரணமாக, 1960-ம் ஆண்டு பம்பாய் மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு குஜராத், மஹாராஷ்டிரா என மேலும் இரண்டு மொழி வழி மாநிலங்கள் உருவாகின.

Gujarath map

ஒன்றுபட்ட பஞ்சாப் - ஹரியானா மாநிலத்தில் பஞ்சாபி மொழி பேசும் மக்களுக்கென தனிமாநிலக் கோரிக்கை எழுந்தன. இந்த கோரிக்கை பஞ்சாபி சுபா என்ற பெயரில் 1950-களிலிருந்து ஒரு இயக்கமாகவே செயல்படத்தொடங்கியது. 1960-களின் பிற்பகுதியில் ஆந்திராவின் பொட்டி ஶ்ரீராமுலு போலவே பஞ்சாபிலும் சாந்த் ஃபதேஹ் சிங், மாஸ்டர் தாரா சிங் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டங்களில் நடத்தினர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு பஞ்சாப் மக்களின் கோரிக்கையை ஏற்று 1966-ம் ஆண்டு செப்டம்பர் 30-ல் பஞ்சாபி மொழி பேசும் மக்களுக்கென பஞ்சாப் மாநிலமும், இந்தி மொழி பெரும்பான்மையாக பேசும் மக்களுக்கென ஹரியானா மாநிலமும் எனப் பிரிக்கப்பட்டு இரண்டு மாநிலங்களாக உருப்பெற்றது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு அஸ்ஸாமின் ஒரு பகுதியாக இருந்தது நாகலாந்து. 1957-ம் ஆண்டிலிருந்து யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்ட இம்மாநிலம் 1963-ம் ஆண்டு டிசம்பர் 1 நாள் புதிய மாநிலமாக பரிணமித்தது. அதேபோல் யூனியன் பிரதேசமாக இருந்துவந்த இமாச்சல பிரதேசமும், மாநில அந்தஸ்தைப் பெற்று 1971-ம் ஆண்டு ஜனவரி 25 அன்று மாநிலமாக உருப்பெற்றது.

வடகிழக்கு மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம்

வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை, 1949-ம் ஆண்டு இந்தியாவோடு இணைக்கப்பட்ட திரிபுரா 1972-ம் ஆண்டு ஜனவரி 21 அன்று தனி மாநிலமாக உருவானது. 1957-ம் ஆண்டுவரை யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூர் பகுதியும், 1972-ம் ஆண்டு மாநில அந்தஸ்தைப் பெற்றது. அதே ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக மேகாலயா மாநிலமும் உருவாக்கப்பட்டது.

ஆச்சர்ய ‘மீஸு’... ஹார்ன்பில் திருவிழா..! வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு விசிட்

Also Read: இந்திய மாநிலங்களின் வரலாறு: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே பிரிக்கப்பட்ட மொழிவாரி மாநிலம்?!|பகுதி-3

இந்தியாவின் மக்கள்தொகை அடிப்படையில் மிகச்சிறிய மாநிலமான சிக்கிம், 1975-ம் ஆண்டு மே 16-ம் நாள் உருவாக்கப்பட்டது. 1954-ம் ஆண்டுகளில் வடகிழக்கு எல்லைப்புற ஏஜென்சி எனும் பெயரில் செயல்பட்டு வந்த அருணாச்சலப்பிரதேசம் 1972-ம் ஆண்டு யூனியன் பிரதேசமாகவும், பின்னர் 1987-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் நாள் மாநிலமாக உருவாக்கம் பெற்றது. அதேபோல யூனியன் பிரதேசமாக இருந்து 1987-ம் ஆண்டில் மீசோ மொழிபேசும் மக்களுக்காக மிசோரம் மாநிலம் உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் நிலப்பரப்பில் மிகச்சிறிய மாநிலமான கோவா, 1961-ம் ஆண்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் டாமன் & டையூவுடன் யூனியன் பிரதேசமாக இருந்துவந்த கோவா, 1987-ம் ஆண்டு மே 30-ல் தனி மாநிலமாக உதயமானது. சுதந்திரத்திற்கு முன்பே 1920-ம் ஆண்டிலிருந்து தனி சத்தீஸ்கர் மாநில கோரிக்கை பல்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்தன. 1990-களின் பிற்பகுதியில் இந்தப் போராட்டம் தீவிரமடையவே, 2000-ம் ஆண்டு நவம்பர் முதல் நாள் மத்தியப்பிரதேசத்திலிருந்து பிரிந்து சத்தீஸ்கர் மாநிலம் உருவானது.

Goa

'தேவபூமி' என்றழைக்கப்படும் உத்தரகாண்ட் மாநிலம், நவம்பர் 9, 2000-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு இந்தியாவின் 27-வது மாநிலமாக உருவானது. அதே ஆண்டு நவம்பர் 15-ம் நாள் பீகாரிலிருந்து பிரிக்கப்பட்டு 'காடுகளின் நிலம்' என பொருள் கொள்ளப்படும் ஜார்கண்ட் மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்டது.

சுதந்திர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்து, விடாது விசாலா ஆந்திராவுக்காகவும் போராடிய தெலுங்கர்களில் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பின்னாட்களில் தனித் தெலுங்கானா கோரிக்கையை முன்வைத்தனர். அதற்காக 1969-ம் ஆண்டு முதல் சிறிய அளவில் தொடங்கிய போராட்டம் காலப்போக்கில் தீவிரமடைந்து 600-க்கும் மேற்பட்டோரின் களப்பலியும் கண்டது. 2009-ம் ஆண்டு சந்திரசேகர் ராவின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க, கிருஷ்ணா கமிட்டி அமைக்கப்பட்டு தனித் தெலங்கானா மாநிலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இறுதியில், 2014-ம் ஆன்டு ஜீன் 2-ம் நாள் தெலங்கானா மாநிலம் உருவானது.

Also Read: இந்திய மாநிலங்களின் வரலாறு: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே பிரிக்கப்பட்ட மொழிவாரி மாநிலம்?!|பகுதி-3

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை காட்டும் வரைபடம்

2019-ம் ஆண்டு மத்திய அரசால் இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டு, சிறப்பு அந்தஸ்தை இழந்த காஷ்மீர் மாநிலம், இரண்டாக பிரிக்கப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டன.

மொத்தமாக 28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்களைக் கொண்டுள்ள இந்தியாவில், இன்னமும் "தனி மாநிலம்” கேட்டு பல்லாண்டுகாலமாக பல்வேறு மாநில மக்கள் போராடி வருகின்றனர். அந்த மாநிலங்கள் எவை? எதற்காக தனிமாநிலம் கேட்கிறார்கள்?

...........காத்திருங்கள் அடுத்த தொடரில்!

முந்தைய பாகங்களைப் படிக்க

பகுதி - 1 - இந்தியா: ஒன்றியம் முதல் கொங்குநாடு வரை! -தனிமாநில கோரிக்கைகளும், மாநிலங்கள் உருவான வரலாறும்|பாகம் 1

பகுதி - 2 - இந்திய மாநிலங்களின் வரலாறு: வெடித்தது உண்ணாவிரதப் போராட்டம்! பிறந்தது மொழிவாரி மாநிலங்கள்|பகுதி -2

பகுதி - 3 - இந்திய மாநிலங்களின் வரலாறு: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே பிரிக்கப்பட்ட மொழிவாரி மாநிலம்?!|பகுதி-3



source https://www.vikatan.com/government-and-politics/politics/history-of-division-of-the-indian-states-part-4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக