Ad

புதன், 21 ஜூலை, 2021

கொரோனா பேரிடரில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 2.3 கோடி குழந்தைகள்! - தமிழகத்தின் நிலை என்ன?

கொரோனா பேரிடர் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா தாக்கத்தால் அனைத்துத் துறைகளும் பாதிப்பைச் சந்தித்தபோதிலும், பெரும் பாதிப்பைச் சந்தித்தது சுகாதாரத்துறைதான். கொரோனா சிகிச்சைக்கு முக்கியத்துவம் வழங்கியதால், மற்ற மருத்துவச் செயல்பாடுகள் மந்தமாகவே நடைபெற்றது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் யூனிசெஃப் அமைப்பு இணைந்து நடத்திய ஆய்வில் உலக அளவில் 2.3 கோடி குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

Dr Tedros Adhanom Ghebreyesus

இந்த ஆய்வின் முடிவில், கடந்த 2019-ம் ஆண்டு எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் 2020-ம் ஆண்டு, 1.7 கோடி குழந்தைகள் எந்தத் தடுப்பூசியும் போட்டுக்கொள்ளவில்லை. 30 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அவர்களின் முதல் தட்டம்மை தடுப்பூசியைத் தவறவிட்டுள்ளனர். 35 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் முதல் டிப்தீரியா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை. கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆண்டில்தான் ஒரு வயதுள்ள குழந்தைகளில் 2.3 கோடி பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 60 சதவிகிதத்துக்கும் அதிகமான குழந்தைகள் இந்தியா, பிரேசில், பாகிஸ்தான், அங்கோலா, காங்கோ ஜனநாயக குடியரசு, நைஜீரியா, எத்தியோப்பியா, இந்தோனேசியா, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ் ஆகிய பத்து நாடுகளைச் சார்ந்தவர்கள். `சமூகமும், சுகாதார அமைப்புகளும் தற்போது கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடாததால் ஏற்படும் நோய்த் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தும். இப்போது குழந்தைகளுக்குத் தடுப்பூசி கிடப்பதை உறுதி செய்வது முன்னெப்போதையும்விட முக்கியமானது' என்று உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, தமிழக பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் பேசினோம். ``கொரோனா தொற்று உச்சத்திலிருந்த நேரத்திலும் தமிழகத்தில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் எண்ணிக்கையில் எந்தத் தொய்வும் ஏற்படவில்லை. குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணியைக் கண்காணிக்க, தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் தங்களின் குழந்தைகளைத் தடுப்பூசி போட அழைத்து வரவில்லையென்றாலும், சுகாதாரப் பணியாளர்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தினர். தற்போதைய நிலவரப்படி 98-99 சதவிகித குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணி விரைந்து முடிக்கப்பட்டும்’’ என்று கூறினார்.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்

குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது எவ்வளவு அவசியம், தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லையென்றால் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள்நல மருத்துவமனை மருத்துவர் சீனிவாசனிடம் பேசினோம். ``பிறந்த குழந்தைக்குத் தடுப்பூசி செலுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கால அளவில் தவறாமல் அந்தந்த மாதத்துக்கான தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதின் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். குறிப்பாக அந்த நாள்களைத் தவறவிடாமல் குழந்தைகளுக்குத் தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும். அப்போதுதான் முழுமையான பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கான தடுப்பூசிகளில் பெரும்பாலான தடுப்பூசிகள் அரசு அமைப்புகள் மூலம்தான் போடப்படுகின்றன. அடுத்ததாக, தனியார் மருத்துவமனையில் போடப்படுகிறது. கடைசியாகத்தான் கார்ப்பரேட் மருத்துவமனைகள். அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை தடுப்பூசி போடும் பணிகளில் எந்தத் தொய்வும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் தனியார் கிளினிக்குகளை எடுத்துக்கொண்டால், கொரோனா காலகட்டத்தில் பல கிளினிக்குகள் செயல்படாததை நாம் பார்த்தோம். அப்படியே திறந்திருந்தாலும் கொரோனா அச்சத்தால் மக்கள் மருத்துவமனைக்கு வருவது குறைந்திருந்தது'' என்றார்.

மருத்துவர் சீனிவாசன்

தொடர்ந்து பேசியவர், ``கொரோனா காலகட்டத்தில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த சில பெற்றோர்கள் தயக்கம் காட்டினார். உதாரணமாக, சாதாரண நேரத்தில் என்னுடைய கிளினிக்கில் இரண்டு அல்லது மூன்று தடுப்பூசி போடப்படும். அதுவே கொரோனா அதிகரித்திருந்த நேரத்தில் ஒன்று அல்லது ஒரு ஊசிகூட போடப்படவில்லை. அந்தச் சூழல் தற்போதுதான் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியிருக்கிறது. குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தாதது நிலைமையை மோசமடையச் செய்யும் என்று அஞ்சப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் குழந்தைகள் வெளியில் எங்கும் வராததால் தமிழகத்தில் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அவர்கள் ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பாக வீட்டில் இருந்தார்கள். உதாரணமாக மூன்று மாதங்களுக்கு முன்பு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறைவுதான். 650 படுக்கைகளில் சிகிச்சைக்காகக் கிட்டத்தட்ட 150 படுகைகளில்தான் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போதைய நிலைப்படி சுமார் 450 படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கோ, இயல்புநிலையோ எந்தச் சூழலிலும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதைத் தவறவிடக் கூடாது. தடுப்பூசி மிக அவசியம்" என்று கூறினார்.

Also Read: Covid Questions: தடுப்பூசி போட்டதை உறுதிப்படுத்தும் SMS வரவில்லை; தடுப்பூசிச் சான்றிதழ் கிடைக்குமா?

குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் தொடர்பாக யூனிசெஃபின் தொடர்பு நிபுணர் சுகதா ராவிடம் பேசினோம். `குழந்தைகள் ஆரோக்கியத்துடனும், நோய் எதிர்பாற்றலுடனும் இருக்க, தடுப்பூசிகள் செலுத்த வேண்டியது மிக அவசியம். யூனிசெஃப் தடுப்பூசி மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கான கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்துச் செயல்பாடுகளிலும் அரசுடன் இணைந்து பணியாற்றிவருகிறது. தமிழகத்தின் தடுப்பூசி போடும் திட்டம், இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரியான திட்டம். இந்தியாவின் பல மாநிலங்களில் தமிழகத்தின் செயல்திட்டம்தான் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதைப் பொறுத்தவரை பெற்றோர்கள் மற்றும் சுகாதார அமைப்பின் முக்கியப் பணி. சமூகத்திலுள்ள ஒரு குழந்தைக்குத் தடுப்பூசி செலுத்தியும், இன்னொரு குழந்தைக்கும் செலுத்தாமலும் இருக்கக் கூடாது. அது சமநிலையை பாதிக்கும். சமூகத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளும் தடுப்பூசி செலுத்தி ஒரு சமநிலையை உருவாக்க வேண்டும். தற்போது தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டதற்கு கொரோனா மட்டுமல்லாமல், பல்வேறு காரணங்கள் உள்ளன. சில நாடுகளில் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சில நாடுகளில் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தி, பெண் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தாத நிலையும் உள்ளது. இப்படி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பிரச்னை இருக்கிறது. அந்த இடங்களிலும் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க யூனிசெஃப் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. குழந்தைகளை நிமோனியா, போலியோ போன்ற பல்வேறு நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள அவர்களுக்குக் கண்டிப்பாகத் தடுப்பூசி செலுத்த வேண்டும்" என்று பேசினார்.

தடுப்பூசி

எந்தச் சூழலாக இருந்தாலும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவேண்டியது அவசியம். குழந்தைகளுக்குச் சுகாதாரமான சூழலை உருவாக்குவதில் பெற்றோருக்கு முக்கியப் பங்கு உண்டு. 2011-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் போலியோ பதிவாகவே இல்லை. இதற்கு ஒரே காரணம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்கள்தான். இதுபோலவே குழந்தைகளுக்கு வரும் பல்வேறு நோய்களும் இந்தியாவிலிருந்து மறைந்துகொண்டிருக்கின்றன. அதற்குக் காரணமும் குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாகத் தடுப்பூசி செலுத்தப்படுவதுதான். இந்தநிலையில், கொரோனா போன்ற காரணங்களுக்காகக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தத் தவறினால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பாக அமைப்பும்!



source https://www.vikatan.com/government-and-politics/healthy/230-crore-children-not-vaccinated-what-is-the-situation-in-tamil-nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக