Ad

செவ்வாய், 17 நவம்பர், 2020

சென்னை: டிவி சீரியல் நடிகரைக் கொலை செய்தது ஏன்? - நண்பர் அதிர்ச்சித் தகவல்

சென்னை எம்.ஜி.ஆர்.நகர், வள்ளல் பாரி தெருவில் உள்ள வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்குக் குடியிருந்தவர் செல்வா என்கிற செல்வரத்தினம் (41). இவர், தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடிகராக இருந்தார். செல்வரத்தினத்துக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் குடியிருந்துவருகின்றனர். செல்வரத்தினம் மட்டும் தனியாக சென்னையில் தங்கியிருந்தார். இந்தநிலையில் கடந்த 15-ம் தேதி ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் செல்வரத்தினத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

கொலை

இந்தக் கொலை தொடர்பாக எம்.ஜி.ஆர்.நகர் இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் வழக்குபதிந்து கொலையாளிகளைத் தேடிவந்தார். இந்தநிலையில் டிவி சீரியல் நடிகர் செல்வரத்தினத்தின் நண்பரான விஜயகுமாரை (36) போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விஜயகுமாருடன் சேர்ந்து அவர்களின் நண்பர்களும் இந்தக் கொலையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. அவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து எம்.ஜி.ஆர்.நகர் போலீஸார் கூறுகையில், ``செல்வரத்தினமும் விஜயகுமாரும் விருதுநகர் மாவட்டம், குல்லூர் சந்தை, டேம் காலனியில் குடியிருந்திருக்கின்றனர். அதனால் இருவரும் நண்பர்களாகப் பழகியிருக்கின்றனர். இந்தச் சமயத்தில் செல்வரத்தினம், டிவி சீரியலில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்துவிட்டார். ஆனால், விஜயகுமார் விருதுநகரிலேயே டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டார். விஜயகுமாரின் மனைவி டைல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

விஜயகுமாரின் மனைவி

Also Read: சென்னை:`அக்காவுக்கு ஜூஸ்; மாமாவுக்கு விஷம்!' - சொத்துக்காகக் கொலை... சகோதரிகள் சிக்கிய பின்னணி

விஜயகுமாரின் மனைவிக்கும் செல்வரத்தினத்துக்கும் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பை விஜயகுமார் கண்டித்திருக்கிறார். ஆனால், இருவரும் கேட்கவில்லை. செல்வரத்தினம் சென்னையில் தங்கியிருந்தபோதிலும் அடிக்கடி விஜயகுமாரின் மனைவியுடன் போனில் பேசி வந்திருக்கிறார். அதனால் செல்வரத்தினத்துக்கும் விஜயகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில்தான் விஜயகுமாரின் மனைவி தீபாவளி பண்டிகையையொட்டி உறவினர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியில் சென்றிருக்கிறார். அவரை ரகசியமாக பின்தொடர்ந்து வந்திருக்கிறார் விஜயகுமார்.

விருதுநகரிலிருந்து சென்னைக்கு வந்த விஜயகுமாரின் மனைவி, செல்வரத்தினத்தைச் சந்தித்திருக்கிறார். அதைப்பார்த்த விஜயகுமார் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து விஜயகுமாரின் மனைவி, ஊருக்குத் திரும்பிவிட்டார். தனக்கு துரோகம் செய்த செல்வரத்தினத்தைக் கொலை செய்ய விஜயகுமார் திட்டமிட்டிருக்கிறார். பின்னர் அதுதொடர்பாக தனது நண்பர்களுடன் ஆலோசித்துவிட்டு 15-ம் தேதி அதிகாலையில் செல்வரத்தினம் தங்கியிருந்த தெருவில் காத்திருந்தார். அப்போது வெளியில் வந்த செல்வரத்தினத்தை ஓட ஓட விரட்டிக் கொலை செய்த விஜயகுமாரும் அவரின் நண்பர்களும் சிசிடிவியையும் சேதப்படுத்திருக்கிறார்கள்.

கொலை

சிசிடிவி சேதப்படுத்தப்பட்ட போதிலும் கொலையாளிகள் வந்த ஆட்டோவின் பதிவு நம்பரைக் கொண்டு விசாரணையை தொடங்கினோம். அதன்பிறகு கொலை செய்யப்பட்ட டிவி நடிகர் செல்வரத்தினத்தின் செல்போனை ஆய்வு செய்தபோதுதான் விஜயகுமாரின் மனைவியுடன் அவர் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். அவரின் நண்பர்களைத் தேடிவருகிறோம்" என்றனர்.

விசாரணையின்போது விஜயகுமார், `என்னுடைய மனைவி, செல்வரத்தினத்தை முழுமையாக நம்பினேன். ஆனால் அவர்கள் எனக்கு துரோகம் செய்துவிட்டனர். அதனால்தான் செல்வரத்தினத்தைக் கொலை செய்தேன்' என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

டி.வி. சீரியல் நடிகரின் வாழ்க்கையில் கூடா நட்பு கேடாய் முடிந்திருக்கிறது.

Also Read: சென்னை: இளம்பெண்ணுடன் நட்பு - டி.வி சீரியல் நடிகர் ஓட ஓட விரட்டிக் கொலை



source https://www.vikatan.com/news/crime/friend-arrested-in-chennai-tv-serial-actor-murder

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக